தனக்கு வரப்போகும் கணவர் தம்மை நன்றாகப் புரிந்து கொண்டவராக, வாழ்க்கையில் அனுசரித்துப் போகக் கூடியவராக இருக்க வேண்டுமென விரும்புகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
சக நடிகைகளில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் தமக்கு மிகவும் பிடிக்கும் என அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களைப் போன்றே உயரங்களைத் தொட ஆசைப்படுகிறாராம்.
நடிகைகள் என்றாலே திருமணம் குறித்து கேள்வி எழுப்புவது வாடிக்கையாகிவிட்டது. சமூக வலைத்தளங்கள், பொது நிகழ்ச்சிகள், ஊடகப் பேட்டிகள் என்று அனைத்து இடங்களிலும் நாயகிகளிடம் நிச்சயமாகக் கேட்கப்படும் கேள்வி திருமணம் பற்றியே இருக்கும்.
இதனால் சில நாயகிகள், இத்தகைய கேள்வி எழும் முன்பு தாங்களே திருமணம் குறித்து பேசிவிடுகிறார்கள்.
அந்த வகையில் தனது திருமணம், எதிர்கால கணவர் பற்றி ஷ்ரத்தா ஸ்ரீநாத் மனம் திறந்துள்ளார். நிச்சயமாக காதல் திருமணம்தான் செய்வாராம். தனது முடிவை யாராலும் மாற்ற இயலாது என்று கூறியுள்ளார்.
“பெரியவர்கள் நிச்சயம் செய்யும் திருமணங்கள் தோல்வி அடைவதாகச் சொல்ல மாட்டேன். ஆனால் எனது வருங்கால கணவரும் நானும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவர்களாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். இதற்கு காதல் திருமணம்தான் வசதியாக இருக்கும்.
“எனவே கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்துகொள்வேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை,” என்கிறார் ஷ்ரத்தா.
நிஜ வாழ்க்கையில் தாம் மிகுந்த துணிச்சல் மிக்க பெண்ணாக உருவாகி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தம்மால் எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இயலும் என்று கூறியுள்ளார்.
தமக்கு புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் இல்லை என்றும், இத்தகைய பழக்கங்கள் உள்ளவர்களே தைரியசாலிகள் என்று சிலர் நினைப்பதை தாம் ஏற்கவில்லை என்றும் ஷ்ரத்தா வெளிப்படையாக அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“எவ்வளவு பெரிய பொறுப்பையும் நான் தைரியமாக ஏற்பேன். இதுதான் துணிச்சல் என்பதன் பொருள்,” என்கிறார் ஷ்ரத்தா.
தமிழில் ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது விஷாலுடன் ‘சக்ரா’, மாதவனுடன் ‘மாரா’வில் நடித்து வருகிறார்.
சக நடிகைகளில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் இவருக்கு மிகவும் பிடிக்குமாம். காரணம், ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகில் இருவரும் பல ஆண்டுகளாக தாக்குப்பிடித்து வருவது பெரிய சாதனை என்கிறார்.
“அது மட்டுமல்ல, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தயக்கமின்றி நடிக்கிறார்கள். தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இவர்களை நம்பி படம் எடுக்கிறார்கள்.
“இவர்கள் இருவருக்குமே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. கதாநாயகர்களுக்கு இணையாக இவர்களாலும் திரையரங்குக்கு ரசிகர்களை வரவழைக்க முடிகிறது. இந்தளவு வளர்ச்சி அடைவதும் சினிமாவில் செல்வாக்குடன் தாக்குப்பிடிப்பது பெரிய சாதனை. இதற்குப் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது,” என்கிறார் ஷ்ரத்தா.
இவர் திருமண வாழ்க்கை குறித்து இந்தளவு தெளிவாக இருக்கிறார் என்றால் நடிகை பூர்ணாவோ, திருமணம் பற்றி யோசித்தாலே அச்சம் ஏற்படுவதாகப் புலம்புகிறார். காரணம் அண்மையில் இவரை மையப்படுத்தி நடந்த பண மோசடி சம்பவம்.
சில வாரங்களுக்கு முன்பு பூர்ணாவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக வரன் தேடி வந்தனர். அப்போது பூர்ணாவை பெண் கேட்டு அவரது குடும்பத்தாரை சிலர் அணுகினர்.
இதையடுத்து இரு குடும்பத்தாரும் பேசி திருமணத்தை நிச்சயம் செய்தனர்.
“என்னை மணக்க இருந்தவரும் நானும் திருமணத்துக்குப் பிறகு எப்படி வாழவேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசினோம். அதன்பிறகு எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை மாறிவிட்டது.
“அந்த போலி கும்பலைச் சேர்ந்தவர்கள் அன்பாகப் பழகி ஏமாற்றினார்கள். அவர்களை நினைத்தாலே பயம் வருகிறது. யாரை நம்புவது என்றே தெரியவில்லை,” என்று இன்னும் அச்சம் விலகாமல் பேசுகிறார் பூர்ணா.
இப்போது திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் கூறிவிட்டா ராம். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள நடனத்தில் கவனம் செலுத்து கிறாராம்.