‘உணர்வுகள் தொடர்கதை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் ஷெர்லின் சேத்.
தென்னிந்திய மாடலிங் துறையில் நல்ல வரவேற்புடன் வலம் வருபவர்.
கடந்த 2017ல் ‘மிஸ் தமிழகம்’ பட்டத்தைத் தட்டிச் சென்ற ஷெர்லின், அதன்பிறகு பல்வேறு விளம்பரங்களில் நடித்த வகையில் பிரபலமானார்.
இந்நிலையில் ‘உணர்வுகள் தொடர்கதை’ படம் மூலம் இவரை கோடம்பாக்கத்து இளம் நாயகிகளுக்குப் போட்டியாக களமிறக்கி உள்ளனர்.
சிறு வயது முதலே நடிப்பு, மாடலிங் துறையில்தான் தமக்கு அதிக ஆர்வம் இருந்ததாகச் சொல்கிறார் ஷெர்லின். நடிகையாக வேண்டும் என்பதுதான் தொடக்கத்தில் இவரது கனவாம். பிறகு இந்த ஆர்வம் விண்வெளித் துறை பக்கம் சாய்ந்துள்ளது.
“என் பெற்றோரைப் பொறுத்தவரை படிப்புக்குப் பிறகுதான் நடிப்பு என்பதில் திட்டவட்டமாக இருந்தனர். சிறுவயது முதலே நன்றாகப் படிக்கவேண்டும் என ஊக்கப்படுத்தியும் வந்தனர். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்து கொடுக்காத வசதிகளே இல்லை.
“பெற்றோரின் இந்த அக்கறையைக் கண்டு நானும் படிப்பில் கவனம் செலுத்தினேன். ஒரு கட்டத்தில் விண்வெளித் துறையில் ஆர்வம் அதிகரித்தபடியால் அது தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தினேன். அவ்வளவு ஏன், விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பதும் எனது கனவுகளில் ஒன்றாக இருந்தது,” என்கிறார் ஷெர்லின்.
விண்வெளிக் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் முடிவுடன்தான் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தாராம். மேலும் பொறியியல் படிக்க சென்னைக்கு இடம் மாறி வந்துள்ளார்.
ஆனால் வந்த இடத்தில் எதிர்பாராத வகையில் மாடலிங் வாய்ப்புகள் தேடிவர, விண்வெளிக் கனவு மாயமாகி விட்டது. ஒன்றிரண்டு விளம்பரங்களில் நடித்து முடித்தபோது அழகி பட்டமும் கிடைக்க முழுமூச்சாக மாடலிங் துறைக்கு மாறியுள்ளார்.
“விளம்பரங்களில் நடிப்பது பெரிய விஷயமல்ல. புகைப்படங்களுக்காக அழகாக காட்சி அளிக்க வேண்டும். சிரிக்கவேண்டும், நடக்கவேண்டும், அவ்வளவுதான்.
“ஆனால், சினிமாவில் நடிப்பது அப்படியல்ல. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களாகவே மாறவேண்டும். அதனால் இது அலாதியான அனுபவம்,” என்கிறார் ஷெர்லின்.
சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் பள்ளி, கல்லூரியில் திறமையை வெளிப்படுத்த முடியவில்லையாம். எப்போதுமே படிப்புக்கு முன்னுரிமை அளித்ததால் தேர்வுகள், மதிப்பெண்கள் என்றே நாட்கள் கடந்துவிட்டதாகக் கூறுகிறார்.
‘உணர்வுகள் தொடர்கதை’ படத்தில் வர்த்தக நிபுணராக நடித்துள்ளாராம் ஷெர்லின். நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடியின் கதையை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குநர் பாலு சர்மா.
“ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியது என் மனதைக் கவர்ந்தது. எனக்கு ஜோடியாக ரிஷிகேஷ் நடித்துள்ளார்.
“இயக்குநர், உதவி இயக்குநர்கள், சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தனர்.
“வசன உச்சரிப்பு, ஒப்பனை என பலவற்றுக்கும் ஒத்தாசையாக இருந்ததற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். படப்பிடிப்புக்கு முந்தைய இரு மாதங்கள் தீவிர ஒத்திகையில் ஈடுபட்டோம்.
“அதனால் படப்பிடிப்பின்போது சிறப்பாக நடிக்க முடிந்தது. இந்தப் படம் எனக்கு நிச்சயம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும்,” என்கிறார் ஷெர்லின் சேத்.
முதல் படம் வெளியான பிறகே அடுத்தடுத்த வாய்ப்புகளை ஏற்கும் முடிவில் உள்ள ஷெர்லின், தமிழில் தற்போதுள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடிக்க விரும்புகிறார்.