பலமான பின்புலம் இருப்பதாலே திரையுலகில் ஒருவர் வெற்றி பெற்றுவிட முடியாது என்கிறார் ஷ்ருதிஹாசன்.
இணையம் வழி புதுப்படங்கள் வெளியாவது தம்மைப் பொறுத்தவரை பெரிய வரம் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘யாரா’ (yaara) இந்திப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. திக்மன்சு ஜூலியா இயக்கியுள்ள இப்படத்தில் வித்யூத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் திரையரங்கில் படம் பார்க்க முடியாதது வருத்தமளிக்கிறதா என்று பலரும் ஷ்ருதியிடம் கேட்கிறார்களாம். அவரோ, தமக்கு அப்படிப்பட்ட வருத்தங்கள் ஏதுமில்லை என்கிறார்.
“எந்தொரு திரைப்படமும் தயாரிப்பாளர்களுக்கு லாபமளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் ‘யாரா’ வெளியீடு காண்பது மகிழ்ச்சி தருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனது முந்தைய படங்கள் எதையும் நான் திரையரங்குச் சென்று பார்த்ததே இல்லை.
“அதனால் நான் நடித்த படம் எத்தகைய தளத்தில் வெளியீடு கண்டாலும் மகிழ்ச்சிதான். ரசிகர்களின் கைதட்டல்களை இதற்கு முன்பும் நான் திரையரங்கில் கேட்டதில்லை. எனவே இவ்விஷயத்தில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை.
“கடந்த 2016ல் ‘யாரா’ படம் துவங்கப்பட்டது. ஒட்டுமொத்த திரையுலகமும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தப் படம் வெளியாவது பெரிய விஷயம். அதுமட்டுமல்ல, மேலும் பரவலான பார்வையாளர்களை இப்படம் சென்றடைவதும் மகிழ்ச்சி தருகிறது,” என்கிறார் ஷ்ருதி.
இந்தப் படத்தில் சுகன்யா என்ற 48 வயது பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம். கடந்த 1970களில் தொடங்கி 1990கள் வரை நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகிறது.
“இயக்குநர் இந்தக் கதையை விவரித்தபோது 48 வயது பெண்ணின் கதை என்பதுதான் என் மனதை வெகுவாகக் கவர்ந்தது. இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிப்பது எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த உதவும் எனக் கருதினேன். மேலும் இதுபோன்ற சவாலான வேடங்கள்தான் ரசிகர்கள் மனதில் நம்மை நிலைநிறுத்தும்,” என்கிறார் ஷ்ருதி.
‘எ கேங் ஸ்டோரி’ (A Gang Story) என்ற பிரெஞ்ச் மொழி படத்தைத் தழுவி உருவாகியுள்ளது ‘யாரா’. இதற்கு முன்பு ‘ராமையா வஸ்தாவைய்யா’ மற்றும் ‘கப்பார்’ (Gabbar) படங்களில் நடித்தபோதும் அவற்றின் மூலப் படங்களை ஷ்ருதி பார்த்ததில்லையாம்.
“பொதுவாக நான் பிறரைப் போன்று நடிக்க விரும்புவதில்லை. மறுபதிப்பு படம் என்றாலும் நம் இயல்புக்கேற்ப ஒரு கதாபாத்திரத்தை மனதில் ஏற்றிக்கொண்டு திரையில் வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பேன். அது எனக்கு நல்ல பெயரையே பெற்றுத் தந்துள்ளது.
“சினிமாவில் முதன்முதலாக கால்பதித்தபோது யாரிடம், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே தெரியாது. கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்று யாரும் சொல்லித் தந்ததில்லை. அதனால் யாரிடமும் சரியாகப் பேசிப் பழக முடியாமல் போனது.
“குறைந்தபட்சம் ஊடகப் பேட்டிகளின்போது எப்படிப் பேசவேண்டும் என்பதுகூட தெரியாததால் பல நல்ல வாய்ப்புகளையும் தொடர்புகளையும் இழந்தேன். அதன்பிறகுதான் ரசிகர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதே தெரியவந்தது. முப்பது வயதைக் கடந்த பிறகுதான் நான் விழித்துக் கொண்டேன் என்று சொல்லவேண்டும்,” என்கிறார் ஷ்ருதி.
தற்போது எது குறித்தும் இவர் பதற்றமடைவதோ அளவுக்கதிகமாக உற்சாகமடைவதோ இல்லையாம். சக மனிதர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக நெருக்கமானவர்களுடன் அடிக்கடி உரையாட வேண்டும் என்பது மிக முக்கியம் என்பதை உணர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.
“நான் அனைவரையுமே நேசிக்கிறேன். வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைக் கற்று வருகிறேன். இந்தக் கற்றல் விரைவாக நடந்திருப்பதாகத் தோன்றுகிறது. எனினும் இந்த வேகமும் கற்றுக் கொண்டவையும் நான் அமைதியாக வாழ உதவுகின்றன,” என்கிறார் ஷ்ருதி.