நடிகர் விஜய், இயக்குநர் அட்லி இருவரும் மீண்டும் கூட்டணி அமைப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகளை அமைதியாக கவனித்து வருகிறார் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் பணிகள் முடிந்துவிட்டதால் ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன் ஆகியோரது இயக்கங்களில் நடிப்பதை உறுதி செய்துள்ளாராம்.
இதையடுத்தே அட்லியுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தகவல். அட்லி தற்போது இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்துப் படம் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
கடந்த இரண்டாண்டுகளாக ஷாருக்கான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. மேலும் கடைசியாக அவர் நடித்த இரண்டு படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை.
இதையடுத்து இருபதுக்கும் மேற்பட்ட இயக்குநர்களிடம் கதை கேட்டும் திருப்தி அடையாத நிலையில், இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானியும் அட்லியும் சொன்ன கதைகள் அவருக்குப் பிடித்துப் போனது.
முதலில் ராஜ்குமார் படத்திலும் பின்னர் அட்லி இயக்கத்திலும் நடிக்க உள்ளார் ஷாருக். இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு அட்லி முன்பணமும் வாங்கிவிட்டாராம்.
ஷாருக்கான் படத்தை இயக்கி முடித்த பின்னர் அட்லி கோடம்பாக்கம் திரும்புவதற்கும் முருகதாஸ், வெற்றிமாறன் படங்களில் விஜய் நடித்து முடிப்பதற்கும் சரியாக இருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.