பெரிய கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும், இந்தாண்டு தமது பிறந்த நாள் அமைதியாகவும் மனநிறைவுடனும் கழிந்ததாகச் சொல்கிறார் மாளவிகா மோகனன்.
‘மாஸ்டர்’ படத்தில் விஜய் ஜோடியாக ஒப்பந்தமான அந்த நொடி முதலே தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிந்த முகமாக இவர் மாறிவிட்டதும் விஜய் ரசிகர்கள் இவரைக் கொண்டாடுவதும் தெரிந்த விஷயம்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி தமது பிறந்த நாளை ‘மாஸ்டர்’ படக்குழுவுடன் கொண்டாட வேண்டும் என்பதுதான் மாளவிகாவின் திட்டமாம். ஆனால் கொரோனா விவகாரம் அவரது கனவு நிறைவேறாமல் தடுத்துவிட்டது. இந்தக் கோபத்தில் ‘கொரோனா ஒரு முட்டாள்’ என விமர்சித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா.
பிறந்தநாளையொட்டி திரையுலகப் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், ‘மாஸ்டர்’ படக்குழு சார்பாக திடீரென சமூக வலைத்தளங்களில் சுவரொட்டி ஒன்று வெளியிடப்பட்டது. அதில் விஜய்யும் மாளவிகாவும் இடம்பெற்றிருந்தனர்.
சுவரொட்டி வெளியான அடுத்த சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கானோர் அதைப் பார்த்து, மிக நன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டு, மாளவிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்க, நெகிழ்ந்து போய்விட்டாராம்.
இந்தச் சுவரொட்டி வெளியீடு குறித்து முன்பே விஜய்யிடம் தகவல் தெரிவித்து, அவரது ஒப்புதலுடன்தான் வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இதை அறிந்ததும் மாளவிகாவின் மகிழ்ச்சி இரட்டிப்பாகி விட்டது.
“இது நான் சற்றும் எதிர்பாராத பிறந்தநாள் பரிசு. இதற்காக படக்குழுவுக்கு என் நன்றி. விஜய் சார் பெருந்தன்மை மிக்கவர்,” என்கிறார் மாளவிகா.
சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சில நிமிடங்கள் உரையாடியபோது, ‘மாஸ்டர்’ பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். முந்தைய பேட்டிகளில் குறிப்பிட்டது போன்றே, “விஜய் மிக எளிமையான மனிதர். எளிதில் அணுகக்கூடியவர். அவருடனும் ரஜினி சாருடனும் அடுத்தடுத்து நடித்தது எனது அதிர்ஷ்டம்,” என்று குறிப்பிட்டார் மாளவிகா.
‘மாஸ்டர்’ படத்தின் கதை குறித்தும் அதில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் குறித்தும் ஒரு ரசிகர் விவரம் கேட்க, “எனது கதாபாத்திரம் ‘சி’ என்ற ஆங்கில எழுத்தில் துவங்கும். கதை குறித்து ஏதும் சொல்ல இயலாது. இதற்கும் மேல் நான் ஏதாவது பேசினால் இயக்குநர் லோகேஷ் என்னைக் கொன்றேவிடுவார்,” எனப் பதிலளித்தார் மாளவிகா.
“பிறந்தநாளன்று சுவரொட்டி வெளியிட்டு என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்த இயக்குநர் லோகேஷுக்கு எனது நன்றி. முட்டாள் கொரோனாவால் எனது பிறந்தநாளை படக்குழுவுடன் செலவிட முடியாமல் போனது. கொரோனா எனது திட்டங்களை மாற்றிவிட்டது. எனினும் அனைவரது அன்புக்கும் நன்றி,” என்று மாளவிகா தமது சமூக வலைத்தளப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் இவரை புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் பலர் காத்திருக்கின்றனர். எனினும் எந்தப் படத்திலும் அவர் இதுவரை ஒப்பந்தமாகவில்லையாம்.
“முதலில் நடித்து முடித்துள்ள படங்கள் வெளியாகட்டும் எனக் காத்திருக்கிறேன். அவசர கதியில் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒட்டுமொத்த உலகமும் முடங்கியுள்ள இந்த வேளையில் எனக்கான வாய்ப்புகள் எங்கேயும் போய்விடாது என நம்புகிறேன்.
“தமிழ் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தால் அதுவே போதுமானது. தொடர்ந்து வெற்றிப் படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
“கொரோனா மறைந்த பிறகு அதுவே எனது இலக்காக இருக்கும். அதுவரை பொறுமையாகக் காத்திருப்பேன்,” என்று திட்டவட்டமாகப் பேசுவது போலவே திட்டமிட்டுச் செயல்படுகிறார் மாளவிகா மோகனன்.