தமிழ்த் திரையுலக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது எப்போது அஜித்தும் விஜய்யும் இணைந்து நடிப்பார்கள் என்பது தான். தொடக்கத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் நடித்த இருவரும் மீண்டும் அதன் பிறகு இணைந்து நடிக்கவில்லை.
‘நேருக்கு நேர்’ படத்தில் விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அஜித்தால் தொடரமுடியவில்லை. அதன் பிறகுதான் சூர்யா இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணையும்போது கால்ஷீட் ஒதுக்குவது, நடிகர், நடிகையர் தேர்வு, ஊதியம், படத் தயாரிப்புச் செலவு எல்லாம் ‘பாகுபலி’யை மிஞ்சிவிடும். இதற்கு முன் பெரிய இயக்குநர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஒப்புக்கொண்ட நிலையில், சூழ்நிலை அமையவில்லை.
இந்நிலையில் அஜித், விஜய் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க தம்மிடம் சில யோசனைகள் இருப்பதாகக் கூறியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மங்காத்தா’. அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையேதான் சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித், விஜய் சந்திப்பு நடைபெற்றது.
அச்சமயம் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இரு படங்களின் படப்பிடிப்பு அருகருகே நடைபெற்றதால் அஜித்தும் விஜய்யும் சந்திப்பது சாத்தியமானது. இந்நிலையில் இருவரையும் திரையில் ஒன்று சேர்க்கப் போவது யார் என்பது தமக்குத் தெரியவில்லை என்கிறார் வெங்கட்.
“அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்குமா என்பதும் எனக்குத் தெரியாது. எனினும் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க என்னிடம் சில யோசனைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே அதை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.
“‘மங்காத்தா’ படப்பிடிப்பில் இருவரும் சந்தித்துப் பேசியபோது ஒரு திட்டத்தை விவரித்தேன். இருவரும் அதை ஏற்றுக்கொண்டனர்,” என்கிறார் வெங்கட் பிரபு.