ரகுல் பிரீத்சிங் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்துக் கொண்டிருக்கிறார். காரணம், இன்ஸ்டகிராமில் இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை புதிய சாதனை படைத்திருக்கிறது.
சுமார் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் இன்ஸ்டகிராமில் ரகுல் பிரீத்சிங்கை தீவிரமாகப் பின்தொடர்கின்றனர். இது ரசிகர்கள் தன்மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது என்கிறார் ரகுல்.
இதையடுத்து காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ரசிகர்களின் அன்பு தம்மை நெகிழ வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்களுடனான உரையாடலின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.
“சமூக வலைத்தளங்களில் இணைவதற்கு முன்பு அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.
“எல்லோரையும்போல் நானும் அவற்றில் இயங்கினேன். திரையுலகிலும்கூட அறிமுகமான புதிதில் எனது வேலை, திறமை குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை.
“ஆனால், இத்தனை ரசிகர்கள்தான் எனக்கு வழிகாட்டி உள்ளனர். இவர்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் சாத்தியமாகி இருக்காது,” என்று காணொளிப் பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் ரகுல்.
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷாபந்தன் நிகழ்வை ஒட்டி தமது சகோதரர் அமன் பிரீத்துடன் இணைந்து மற்றொரு காணொளியை வெளியிட்டுள்ள அவர், அமனைப்போலவே தமக்கு ஏராளமான சகோதரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. எனது லட்சக்கணக்கான ரசிகர்கள் வாழ்நாள் முழுவதும் சிரிப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கவேண்டும்.
“நான் நூறு விழுக்காடு திறமையுள்ள நடிகை என்று சொல்லமாட்டேன். எனினும் அந்த இலக்கை நோக்கிச் செல்வேன். அதன்மூலம் ரசிகர்களையும் மகிழ்விப்பேன். சமூக வலைத்தளங்கள் மூலமாகவே எனது ரசிகர்களைப் பாசத்துடன் அணைக்கிறேன்,” என்று ரகுல் பிரீத்சிங் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு இணையத்தில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்திய அளவில் முன்னணியில் உள்ள திரைப்பாடல்களின் பட்டியலை யூடியூப் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் இந்தி, தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ள திரைப்படங்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தகைய பட்டியலில் ‘சூரரைப் போற்று’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டுப்பயலே’ பாடல் 28வது இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து இப்பாடலுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு முறையும் ஜி.வி. பிரகாஷ் தம்மைப் புதுப்பித்துக்கொள்வது வெகுவாகக் கவர்கிறது,” என்கிறார் சூர்யா.
இதற்கிடையே மேலும் பல திரைப்பிரபலங்களை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை கடந்த நான்கைந்து மாதங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டகிராம் தளத்தில் சமந்தாவை முந்திவிட்டதாக ஒரு தகவல் அண்மையில் வெளியானது. ஆனால், இது உண்மையல்ல என்று சமந்தாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழில் நடித்துவரும் நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்டோரும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ரசிகர்களுடனான நேரடி உரையாடல்களையே விரும்புகிறார்களாம். மேலும் காணொளித் தொகுப்புகள், கவர்ச்சிப் படங்களை தொடர்ந்து வெளியிடுதல், சமூக விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தல் என்று பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.
இதனால் சமூக வலைத்தளப் பக்கங்களைப் பார்வையிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தகவல்.