கடந்த நான்கைந்து மாதங்களாக முடங்கிக் கிடந்த தமிழ்த் திரையுலகம் தற்போது மெல்ல சுறுசுறுப்படைந்து வருகிறது.
இதையடுத்து புதுப்படங்கள் குறித்து புதுப்புதுத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இயக்குநர் பாரதிராஜா, தாம் ஏற்கெனவே இயக்கிய ஒரு படத்தை மறுபதிப்பு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவரது இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து பெரும் வெற்றியடைந்தது படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’.
கதைப்படி அழகழகான பெண்களாகத் தேடிப்பிடித்து காதலிப்பார் பணக்காரரான பட நாயகன். பின்னர் அந்தப் பெண்களை அவரே கொலை செய்தும் புதைப்பார். அவர் மனோதத்துவ ரீதியில் பாதிக்கப்பட்டவராக கதையில் சித்திரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் மறுபதிப்பில் சில மாற்றங்களைச் செய்துள்ளாராம் பாரதிராஜா. அதன்படி கதை நாயகிதான் அழகான ஆண்களைத் தேடிப்பிடித்து தன் வலையில் விழவைத்து பின்னர் கொலையும் செய்கிறாள்.
முதல் பாகத்தைவிட மறுபதிப்பில் திகில் காட்சிகள் அதிகமாக இருக்குமாம். இந்த மறுபதிப்பை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், தாமே இயக்குவது என இப்போது முடிவு செய்துள்ளாராம் பாரதிராஜா.
இதையடுத்து கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகிய இருவரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சில தினங்களுக்குமுன் தகவல் வெளியானது.
அனுபவம் அதிகம் என்பதால் சமந்தாவைதான் பாரதிராஜா தேர்வு செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கீர்த்தி சுரேஷைதான் அவர் தேர்வு செய்துள்ளாராம். ‘நடிகையர் திலகம்’, ‘பெண்குயின்’ ஆகிய இரு படங்களிலும் கீர்த்தியின் நடிப்பு அவர் மனதைக் கவர்ந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
வணிக அம்சங்கள் நிறைந்த படத்தில் நடிக்க இருப்பது தமக்கு உற்சாகமளிப்பதாக நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.
மற்ற கலைஞர்களையும் உறுதி செய்தபிறகு பாரதிராஜா தரப்பிலிருந்து அதிகாரபூர்வத் தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது. அதுவரை வெளியாகும் தகவல்களை ரசிகர்கள் நம்பிவிட வேண்டாம் என்கிறார் மனோஜ் பாரதிராஜா.
இதற்கிடையே அஜித் நடிக்க உள்ள புதுப்படம் குறித்த தகவலும் கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. இதற்கு முன் வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரங்களில் அஜித்தின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. ‘வாலி’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட படங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இந்நிலையில் முன்னணி இயக்குநர் ஒருவர் அதீத வில்லத்தனத்துடன் கூடிய ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கி உள்ள கதையை அஜித்திடம் சொல்லியிருக்கிறாராம். அது அஜித்துக்கும் பிடித்துப் போனதை அடுத்து அடுத்தாண்டு பிற்பாதியில் இப்படத்துக்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு துவங்கிய பிறகுதான் வெளியாகும் என்கிறார்கள்.
அதற்குள் கதையில் மேலும் சில மாற்றங்களைச் செய்து ரசிகர்களைக் கவரும் சில அம்சங்களைச் சேர்க்குமாறு அஜித் கேட்டுக் கொண்டதாகத் தகவல்.
‘ஜோக்கர்’ ஆங்கில படம், ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ நடித்துள்ள ‘தி வுல்ஃப் ஆஃப் வால்ஸ்திரீட்’ ஆகியவை அஜித்துக்குப் பிடித்தமான படங்கள். இவற்றின் சாயலுடன் சில காட்சிகளை அமைக்குமாறும் அஜித் தரப்பு கேட்டுக் கொண்டதாக தகவல். இதுபோன்ற படங்கள் தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றியமைக்கும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.