ஊரடங்கின்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முன் எப்போதையும் விட நடிகர் நடிகைகளிடம் மவுசு அதிகரித்திருக்கிறது.
ரசிகர்களைக் கவர பலவிதங்களில் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் நடிகர் நடிகைகள்.
அந்த வகையில் அவ்வப்போது முன்னணி நடிகைகளின் தங்கள் அழகைக் காட்டும் புகைப்படங்கள், உற்சாகமாகப் பேசும் காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த வாரம் நடிகைகள் ஹன்சிகா, வேதிகா, ரித்விகா ஆகியோர் தங்களது அண்மைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
ஹன்சிகா தற்போது தனது ஐம்பதாவது படமான ‘மஹா’வில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ‘டிராகன் ஃபோட்டோஸ்’ என்ற பாணியைப் பின்பற்றி அவரது புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது பளபளப்பான உடைகளை அணிந்து இருட்டறையில் நின்றபடி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களாம்.
இந்தப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ‘மஹா’வைத் தொடர்ந்து ‘பார்ட்னர்’ உள்ளிட்ட மேலும் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் ஹன்சிகா. தமது அண்மைய புகைப்படங்களுக்கு இன்ஸ்டகிராம் தளத்தில் ரசிகர்களின் பின்னூட்டங்கள் மிக சுவாரசியமாக இருந்ததாகச் சொல்கிறார் ஹன்சிகா.
நடிகை வேதிகாவை கோடம்பாக்கம் பக்கம் பார்த்து நாளாகிறது. இந்நிலையில் தென்னிந்திய ரசிகர்களைக் கவர வேண்டும் என முடிவெடுத்து அவரும் சமூக வலைத்தளங்களை நம்பி களமிறங்கி உள்ளார்.
வேதிகாவின் அண்மைய கவர்ச்சிப் படங்களுக்கு ஆந்திராவிலும் தமிழகத்திலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த உற்சாகத்தில் இரண்டு புதிய காணொளிகளைப் பதிவிட முடிவு செய்துள்ளாராம்.
அதில் ஒன்று கொரோனா விவகாரம் குறித்தும் மற்றொன்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சுவாரசியமான தகவல்களுடனும் இருக்கும் எனத் தகவல்.
ஹன்சிகாவும் வேதிகாவும் கவர்ச்சியை நம்பிக் களமிறங்கியுள்ள நிலையில் ‘பிக்பாஸ்’, ‘கபாலி’ மூலம் பிரபலமான ரித்விகாவும் அண்மையில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இப்படங்களில் அவர் வழக்கம்போல் குடும்பப்பாங்காக காட்சியளிக்கவில்லை என்றாலும் கவர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை.
நவீன உடையில் தன் வீட்டு மொட்டை மாடியில் நின்றபடி அவர் எடுத்துக்கொண்ட படங்களே இணையத்தில் உலா வருகின்றன. இவற்றைக் கண்ட ரசிகர்கள் பலர் நவீன உடையிலும் ரித்விகா அழகாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியில் உள்ளார் ரித்விகா.