எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் அப்படத்துக்கு ‘பொம்மை’ என தலைப்பு வைத்துள்ளனர்.
ஜாஸ்மின் சந்தோஷ், தீபா டி.துரை தயாரித்துள்ள இப்படத்தில் சாந்தினி, ‘டவுட்’ செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
“ராதாமோகன் படம் என்றால் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம் என்பது ரசிகர்களுக்கு நன்கு தெரியும். அவருக்கு தரமான ரசிகர்கள் உள்ளனர்.
“இந்தப் படத்தின் மூலம் அவர் சராசரி ரசிகர்களையும் சென்றடைவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
“நேர்த்தி என்பதற்கு எல்லையே கிடையாது. நம்மால் எந்தளவு முடியுமோ அந்தளவிற்கு எதையும் நம் அறிவுத்திறனுக்கு ஏற்ப நேர்த்தியாகச் செய்யலாம். இதற்கு ராதாமோகன் சிறந்த உதாரணம்.
“அவரது அர்ப்பணிப்பும் உழைக்கும் பாணியும்தான் என்னை இப்படத்தில் நடிக்க வைத்தது. இந்தத் தரமான படைப்பு விரைவில் வெளியீடு காணும்,” என்கிறார் எஸ்.ஜே. சூர்யா.