ஒரு திரைப்படம் வெற்றி பெறும்போது அதற்கு உரிமை கொண்டாடுவதும் தோல்வி அடைந்தால் பிறர் மீது பழி போடுவதும் திரையுலகில் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் சங்கதிதான்.
எனவே சினிமா உலகில் நன்றி தெரிவிப்பது என்பது எப்போதாவது நடக்கும் நிகழ்வு என்றாகிவிட்டது. அதனால் ஒருவர் நன்றி தெரிவித்தால் அது நிச்சயம் பெரிய செய்திதான்.
அந்த வகையில் திரையுலகப் பிரபலங்கள் சிலர் அண்மையில் சிலருக்கு நன்றி தெரிவித்தது குறித்து அறிந்து கொள்வோம்.
அஜித் நடிப்பில் உருவான 'நேர்கொண்ட பார்வை' வெளியாகி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், தமக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தமைக்காக இயக்குநர் வினோத், கதை நாயகன் அஜித் இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
மேலும் இப்படத்தின் முதல் நாள், முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தபோது எழுந்த கைதட்டல்களுடன் கூடிய காணொளியையும் அஜித்துடன் தாம் இருக்கும் புகைப்படத்தையும் ஷ்ரத்தா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமிதாப் நடிப்பில் இந்தியில் வெளியான 'பிங்க்' படத்தின் மறுபதிப்பாக தமிழில் உருவானது 'நேர்கொண்ட பார்வை'.
இதில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதில் மீரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அனைவரையும் கவரும் வகையில் நடித்திருந்தார் ஷ்ரத்தா. படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"மீரா வலிமையான, எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய பெண். எப்போதும் தன் கையில் ஒரு ரப்பர் பேண்டையும் அணிந்திருப்பார். வெப்பம் அதிகமாகும் சமயத்தில் அதைக் கொண்டு தன் தலைமுடியைக் கட்டிக் கொள்வார்.
"மீரா தற்சார்புடையவர். பெண்கள் அனைவரும் மீராவைப் போல இருக்கவேண்டும். தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் ஓர் உச்ச நட்சத்திரம் இப்படத்தின் ஓர் அங்கமாக இருக்க முன்வந்ததில் இருந்தே இப்படத்தின் கதை எப்படிப்பட்டது என்பது புரியும்.
"நாம் பேசத் தயங்கும் விஷயங்களைப் பேசும் ஒரு படத்தின் அங்கமாக இருந்ததும் 'தல'யுடன் சேர்ந்து நடித்ததும் பெரும் கௌரவம்," என ஷ்ரத்தா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நடிகர் சிம்புவும் ஒருவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த 'ஒருவர்' இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.
அண்மைய பேட்டி ஒன்றில் சிம்பு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "சிம்பு ஒரு சுயம்பு" என்று குறிப்பிட்டிருந்தார் பார்த்திபன்.
இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது வீட்டுக்கு பூங்கொத்தும் இனிப்பும் அனுப்பி வைத்துள்ளார் சிம்பு.
இவர்கள் இருவரும் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. இருப்பினும் தனது திறமையைப் பாராட்டியதற்காக சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து பார்த்திபனும் தன் பங்கிற்கு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"'சுயம்பு' சிம்பு பற்றிய பாராட்டு அவருக்கு எட்ட, அவரது உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார். மிஸ்டர் சிம்பு நன்றி தெரிவித்ததில் மிஸ்டர் பண்பு ஆனார் எண்ணப் புத்தகத்தில்!
"நாம் இருவரும் ஏன் இணைந்து பணியாற்றவில்லை என எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அதாகப்பட்டது, விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்," என்று பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பார்த்திபன், சிம்பு கூட்டணி ஒரு படத்தில் இணைவது குறித்த அறிவிப்பு வெளியானால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
நடிகர் சந்தானம் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது வளர்ச்சியில் சிம்பு மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகவும் சந்தானம் கூறுகிறார்.
நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு முன்னணி நடிகர்கள் யாரும் இவரைக் கண்டுகொள்வதில்லையாம். ஆனால் சிம்பு மட்டும் தொடர்பில் உள்ளாராம்.
"நகைச்சுவை நடிகனாக எனக்குப் பல வாய்ப்புகளைக் கொடுத்ததும் பெற்றுத் தந்ததும் சிம்புதான். இப்போது எனது படங்கள் குறித்து அக்கறையுடன் விசாரிக்கிறார். சாதிக்கவேண்டும் என்பதற்கு தூண்டுகோலாக இருக்கும் அவருக்கு என்ற நன்றி," என்கிறார் சந்தானம்.

