கடந்த ஒன்பதாம் தேதி தனது பிறந்தநாளை அமைதியாகக் கொண்டாடியுள்ளார் ஹன்சிகா. நெருக்கமான சிலர் தொலைபேசி வழி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதையெல்லாம்விட சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழையாகப் பொழிந்து தள்ளினர். அதுதான் தம்மை வெகுவாக உற்சாகப்படுத்தியது என்கிறார்.
தற்போது ஹாலிவுட் நாயகிகள் போல் உடல் மெலிந்து காணப்படுகிறார் ஹன்சிகா.
அண்மைக்காலமாக இவரை நேரில் சந்திக்கும் அனைவருமே மறக்காமல் எழுப்பும் கேள்வி, “எப்படி இந்தளவு உடல் இளைக்க முடிந்தது?” என்பதுதான்.
ஹன்சிகாவும் அந்த ரகசியத்தை விலாவாரியாக விவரிக்கிறார். இத்தனைக்கும் உணவுக் கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றவில்லையாம். எல்லாம் உடற்பயிற்சி செய்த மாயமாம்.
தனது ஐம்பதாவது படமான ‘மஹா’வை எப்படியாவது வெற்றிப்படைப்பாக உருவாக்கவேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவர், அண்மையில் இணையத்தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
போதாத குறைக்கு யூடியூப் தளத்திலும் பரபரப்பாக இயங்குவதால் கொரோனா ஊரடங்கு வேளையிலும் ஹன்சிகாவை கையில் பிடிக்க முடியவில்லை.
ஓய்வாக இருக்கும்போதே பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் தனது கைபேசியைப் பயன்படுத்தி சிறு காணொளிப் பதிவுகளை உருவாக்கி வருகிறாராம்.
“திரையுலகம் மீண்டும் செயல்படத் தொடங்கியதும் நேரம் கிடைக்காது. அதனால்தான் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
“தொடர்ந்து காணொளிகளை வெளியிட்டு, ரசிகர்களுடன் ஒருசில நிமிடங்கள் பேசினால் அவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும்,” என்கிறார் ஹன்சிகா.
விமானப் பயணம் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று சிறு குழந்தையைப் போல் உற்சாகமாக சொல்பவருக்கு, உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும் என்று ஆசையாம். தினமும் விமானப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றாலும் தயார் என்கிறார். அப்படிப்பட்ட தன்னை கொரோனா கிருமி வீட்டிலேயே கட்டிப்போட்டு விட்டது என்பதுதான் ஹன்சிகாவின் அண்மைய புலம்பல்.
சரி... ஊரடங்கின்போது என்ன செய்கிறாராம்?
“முதலில் நான் உடல் மெலிந்தது தொடர்பான ரகசியத்தைச் சொல்கிறேன். எல்லோரும் நான் பட்டினி கிடந்து உடல் இளைத்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
“உண்மையில் நான் சாப்பாட்டுப் பிரியை. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மனதுக்குப் பிடித்ததைச் சாப்பிடுவேன். ஆனால் உடற்பயிற்சி என்று வந்துவிட்டால் எந்த சமரசமும் கிடையாது. ஒருநாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வேன்,” என்று சொல்லும் ஹன்சிகா தினமும் குறைந்தபட்சம் எழு கிலோமீட்டர் தூரம் மெதுவோட்டம் செல்கிறார்.
வாரத்தில் மூன்று நாள் யோகா செய்யும் இவருக்கு தனி உடற்பயிற்சியாளரும் உள்ளார். உடற்பயிற்சி, யோகா ஆகிய இரண்டும்தான் இவரது ஆரோக்கியத்தைக் காக்கும் இரு தூண்களாம்.
பெரிய பக்தை என்று சொல்ல முடியாவிட்டாலும், ஹன்சிகாவுக்கு ஆன்மிகத்திலும் ஓரளவு ஈடுபாடு உள்ளது.
“ஆன்மிக அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக அமையும். எனக்கு ஆன்மிகத்தில் ஆர்வம் என்று சொல்வதைவிட, கர்மாவின் மீது அதிக நம்பிக்கை உண்டு என்று சொல்லலாம். என்னதான் கடவுள் மீது நாம் பெரும் பக்தி கொண்டிருந்தாலும், விதிப்படி நடப்பதை மாற்ற இயலாது. இதை அதிகம் நம்புகிறேன்,” என்று சொல்லும் ஹன்சிகா சிறு வயதில் தொலைக்காட்சி தொடர்களிலும் சில இந்திப் படங்களிலும் நடித்தவர்.
இந்த ஊரடங்கின்போது பழைய நினைவுகளை மனதில் அசைபோட்டாராம். ஹிருத்திக் ரோஷன், பிரீத்தி ஜிந்தா இணைந்து நடித்த ‘கோயி மில்க்யா’ இந்திப் படத்தில் ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினார்.
“இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கனடா சென்றிருந்தோம். அப்போது என்னுடைய பிறந்தநாள் வந்தது. இதை தெரிந்துகொண்ட படக்குழுவினர் பிறந்தநாளை கொண்டாடினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படம் எனது பிறந்த நாளன்றுதான் வெளியானது. அந்த இனிமையான நாட்களையும் அனுபவங்களையும் மறக்கவே இயலாது,” என்கிறார் ஹன்சிகா.