‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ உள்ளிட்ட படங்களின் வரிசையில் இணைய உள்ளது ‘தட்பம் தவிர்’.
முழு நீள திகில் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் முக்கிய காட்சிகளை கோவாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கி உள்ளனர்.
‘கந்தக்கோட்டை’, ‘ஈகோ’ படங்களை இயக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.
“யாரும் எதிர்பார்க்காத, யூகிக்க இயலாத காட்சிகளோடு கதை நகரும். அதனால் தொடக்கம் முதல் இறுதிவரை உங்களை கதை உங்கள் இருக்கையிலேயே கட்டிப்போடும்,” என உத்தரவாதம் அளிக்கிறார் இயக்குநர் ஜெகன் நாராயணன்.
இவர் இயக்குநர் சக்திவேலிடம் பணியாற்றியவர். அந்த அனுபவத்துடன் களமிறங்கி உள்ளார்.
தேன் நிலவை காட்டுப் பகுதியில் கொண்டாட முடிவெடுக்கிறது ஒரு காதல் ஜோடி. திருமணத்துக்குப் பின் திட்டத்தைச் செயல்படுத்தும்போது காட்டுக்குள் சில தீய சக்திகளிடம் சிக்குகின்றனர்.
அவர்களிடம் இருந்து இருவரும் தப்பித்தனரா? என்பதுதான் கதை. முழுப் படத்தையும் அடர்ந்த காடுகளிலேயே படமாக்கி உள்ளனர்.
‘பரதேசி’, ‘நான் சிவனாகிறேன்’ படங்களில் நடித்த கார்த்திக் அசோகன் நாயகனாகவும் மும்பை மாடல் அழகி பாயல் நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவரும் சிறப்பாக நடித்திருப்பதாகப் பாராட்டுகிறார் இயக்குநர். படம் மிக விரைவில் திரைகாண உள்ளது.