‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நாயகனாக நடிக்கும் படம் ‘லிஃப்ட்’. இதில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் காயத்ரி ரெட்டி.
அருகே உள்ள அவரது புகைப்படத்தைப் பார்த்த அடுத்த கணமே ‘அட... நம்ம சிங்கப்பெண்...’ என்று உங்களில் பலர் நினைத்திருப்பீர்கள்.
‘பிகில்’ படத்தையடுத்து காயத்ரி நடிக்கும் படம் இது. வினித் வரபிரசாத் இயக்குகிறார். விஜய்யுடன் நடித்ததை நினைத்துப் பார்த்தால் கனவுபோல் தோன்றுகிறது என்று இன்னமும்கூட பிரமிப்புடன் பேசுகிறார் காயத்ரி.
“என்னைப் போன்ற அனைத்து இளம் நடிகைகளுக்குமே விஜய் சாருடன் நடிக்கவேண்டும் எனும் இலக்கு இருக்கும். ஓரிரு காட்சிகளில் அவருடன் நடித்தாலே போதும் என்று நினைப்போம்.
“அவருடன் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேல் படப்பிடிப்பில் பங்கேற்றது, அவரது நடிப்பை அருகில் இருந்து பார்த்து ரசித்தது எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்,” என்கிறார் காயத்ரி.
‘லிஃப்ட்’ படத்தில் தமக்கு வலுவான கதாபாத்திரம் அமைந்திருப்பது மகிழ்ச்சி தருவதாகக் குறிப்பிடுபவர், ‘பிகில்’ மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள அறிமுகமும் அடையாளமும் தனது திரைப் பயணத்தில் வெகுவாகக் கைகொடுக்கும் என்கிறார்.
“இயக்குநர் வினித் வரபிரசாத் மிகத் திறமையானவர். அவரது திரைக்கதை அமைப்பு பிரமிக்க வைக்கிறது. படம் பார்க்கும்போது திரையில் சில மாயா ஜாலங்கள் நிகழும்போது நான் சொல்வது எந்தளவு உண்மை என்பது ரசிகர்களுக்கும் புரியும்,” என்று பாராட்டும் காயத்ரி, தமக்கான கதாபாத்திரம் மிக அருமையாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்தி தெரிவிக்கிறார்.
படப்பிடிப்பின் போது தாம் ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே மாறிவிட்டதாகக் குறிப்பிடுபவர், சில காட்சிகளில் நடித்தபோது தம்மையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டாராம்.
“பின்னணிக் குரல் கொடுத்தபோதும் உணர்ச்சிமயமாகப் பேசினேன். இந்தக் கதாபாத்திரம் என்னை மனதளவில் வெகுவாகப் பாதித்துள்ளது என்பதை உணர முடிந்தது.
“இந்தப் படம் எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் கீழே இருந்து பலரை மேலே அழைத்துச் செல்லும் ‘லிஃப்ட்’ ஆக இருக்கும்,” என்று நம்பிக்கையுடன் பேசும் காயத்ரி, அண்மையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்தவர், உரையாடல் முடியும் வரை குறையாத உற்சாகத்துடன் பேசியதைப் பலரும் பாராட்டினர்.
பட நாயகன் கவின் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் வெளிப் படையாகப் பதிலளித்தார்.
“ஒரே வரியில் சொல்வது என்றால் அவர் மிகவும் பெருந்தன்மையானவர், பெரிய மனதுக்காரர் என்பேன். எப்போதுமே மிகவும் இயல்பாகவும் நட்பாகவும் பேசிப் பழகுவார்,” என்றார் காயத்ரி.
‘பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அவருடன் மீண்டும் இணைந்து நடித்தது இனிய அனுபவம் என்கிறார் காயத்ரி.
நாயகன் கவினும் அம்ரிதாவும் ‘லிஃப்ட்’டில் சிக்கிக் கொள்கிறார்கள். அதன் பிறகு நிகழும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும்தான் கதையாம்.
ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாகவும் திகில் நிறைந்ததாகவும் இருக்குமாம். படம் வெளியானதும் தனக்கு மேலும் பல புதுப்பட வாய்ப்புகள் தேடிவரும் என்கிறார் காயத்ரி.