‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’ (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘அருவா சண்ட’.
இது கபடி மோதலையும் காதல் சண்டையையும் மையமாக வைத்து உருவாகும் படைப்பாம். அதிலும் குறிப்பாக கௌரவக் கொலையைப் பற்றி விரிவாக அலசும் கதை என்கிறார் இயக்குநர் ஆதிராஜன்.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ராஜா, மாளவிகா மேனன் இருவரும் நாயகன் நாயகியாக நடிக்க, சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, ‘காதல்’ சுகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சரண்யா பொன்வண்ணன் இதுவரை ஏற்காத மாறுபட்ட வேடத்தில் மிரட்டியிருக்கிறாராம்.
‘சிட்டு சிட்டு குருவி, வாலாட்டுதே..’ என்ற பாடலை நடிகை ரம்யா நம்பீசன் கொஞ்சும் குரலில் பாடியிருக்கிறார்.
“யூடியூப்பில் வெளியிடப்பட்ட இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இளையர்களைக் கவரும் வகையில் அருமையாக இசையமைத்துள்ளார் தரண்,” என்று பாராட்டுகிறார் இயக்குநர் ஆதிராஜன்.