'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தமக்கு எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லை என்கிறார் யாஷிகா ஆனந்த்.
'ஜாம்பி', 'இவன்தான் உத்தமன்', 'ராஜபீமா', 'சிறுத்தை சிவா' என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முடித்திருந்தாலும் இன்னும் பெரிய வெற்றியை இவர் பெறவில்லை.
இந்நிலையில் ஊரடங்கைப் பயன்படுத்தி திடீரென நன்றாக உடல் இளைத்துள்ளார் யாஷிகா. மேலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் தலைகாட்டத் துவங்கி உள்ளார்.
"ஏன் தொடர்களில் நடிக்கிறீர்கள் என்று கேட்காத ரசிகர்களே இல்லை. நான் தற்போது நடிக்கும் தொடரின் இயக்குநர் எனக்கு நல்ல நண்பர். அவர் கேட்டுக் கொண்டதால்தான் அதில் நடித்தேன்.
"நான் ஏற்றிருப்பது கௌரவ கதாபாத்திரம்தான். இதன் பிறகு வேறு எந்தத் தொடரிலும் என்னைப் பார்க்க இயலாது," என்று திட்டவட்டமாகச் சொல்லும் யாஷிகாவின் நடிப்பில் அடுத்தடுத்து ஐந்து படங்கள் வெளியாக தயாராக உள்ளனவாம்.
"அவற்றுள் எந்தப் படம் திரையரங்கில் வெளியீடு காணும், எவை எல்லாம் நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்பது எனக்குத் தெரியாது. ஊரடங்கு அமல்படுத்தப்படும் முன்பே இந்தப் படங்களுக்கான அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. இருப்பினும் சில காரணங்களால் வெளியீடு காணவில்லை.
"அதனால் மிகவும் விரக்தியாக இருந்தது. பிறகு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தியதால் பழைய உற்சாகத்துக்கு திரும்பியுள்ளேன்," என்கிறார் யாஷிகா.
உடல் எடையைக் குறைக்க காரணம்?
"புதுப் படத்துக்காகவோ, நான் ஏற்கும் கதாபாத்திரத்துக்காகவோ இப்படி இளைக்கவில்லை. நீண்ட நாட்களாக எனக்கு இப்படியோர் எண்ணம் இருந்தது. ஊரடங்கு வசதியாக அமைந்ததால் இளைத்துவிட்டேன்," என்று சொல்பவர், 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்பதை தம்மால் ஏற்க முடியாது என்கிறார்.
மேலும், விளம்பரத்துக்காக அந்த நிகழ்ச்சியில் சில விஷயங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதாக தாம் கருதவில்லை என்றும் கூறுகிறார்.
"ஒரு நிகழ்ச்சியின் வெற்றி, தோல்வியை வேண்டுமானால் தரக்குறியீடு மற்றும் விளம்பரங்கள் தீர்மானிக்கலாம். மனிதர்களின் குணாதிசயங்களை முடிவு செய்ய முடியாது.
"'பிக்பாஸ்' பங்கேற்பாளர்கள் அந்த வீட்டில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப எதிர்வினையாற்றுகிறார்கள். அந்த நிகழ்ச்சியால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவே இவ்வாறு நிகழ்கிறது.
"எனவே பங்கேற்பாளர்கள் சித்ரவதை செய்யப்படுவதாக கூறப்படுவதை எல்லாம் ஏற்க முடியாது. அப்படிப் பார்த்தால் சண்டை போட்டுக் கொண்டாலும் பங்கேற்பாளர்களுக்குள் மீண்டும் சமாதானமும் ஏற்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்," என்கிறார் யாஷிகா.
தொடர்ந்து கவர்ச்சிக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பதில் இவருக்கு விருப்பம் இல்லையாம். குணச்சித்திர பாத்திரங்களிலும் கவனம் செலுத்த விரும்புகிறாராம்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு தமக்குப் பெண் ரசிகைகள் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடுபவர், அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் முனைப்பாக இருப்பதாகச் சொல்கிறார்.
"இனிமேல் நான் நடிக்கும் கதாபாத்திரங்களில் அதிக கவர்ச்சி இருக்காது.
"உண்மையில் இப்போது நிறைய கண்ணியமான கதாபாத்திரங்கள்தான் தேடி வருகின்றன.
"இந்த மாற்றத்துக்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியும் ஒரு காரணம் என்பேன்.
"இது நான் எதிர்பாராத ஒரு விஷயம். ஆனால் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது," என்று சொல்லும் யாஷிகா ஊரடங்கின்போது தம்மால் இயன்ற சில உதவிகளை ஆதரவற்ற மக்களுக்குச் செய்துள்ளார்.
இதுகுறித்து விளம்பரப்படுத்திக் கொள்ள யாஷிகா விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள புதுப் படங்கள் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகுமாம்.
சினிமா ரசிகர்களை மகிழ்வப்பதே தமது முக்கியமான பணி என்று அக்கறையுடன் பேசுகிறார் யாஷிகா ஆனந்த்.
நடப்பு ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் மேலும் சில சுவாரசியமான, முக்கியமான தகவல்களை வெளியிடப் போவதாகவும் சொல்கிறார்.

