கொரோனா ஊரடங்கு காரணமாக கோடம்பாக்கத்தில் தொழிலாளர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை பலரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
அவர்களில் முன்னாள் வில்லன் நடிகரான சூர்யகாந்தும் ஒருவர். பாக்யராஜ் நடித்த 'தூறல் நின்னு போச்சு' படம் மூலம் அறிமுகமான நடிகர் சூர்யகாந்த் தற்போது சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் தவித்து வருவதாகக் கூறியுள்ளார்.
கார்த்தி நடித்த 'கைதி', விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் சூர்யகாந்த். அதன் பின்னர் உரிய வாய்ப்புகள் இல்லாததாலும் ஊரடங்காலும் வருமானம் இன்றி முடங்கி உள்ளாராம்.
"எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. மாதந்தோறும் மருந்து மாத்திரைகளுக்கே 1,500 ரூபாய் தேவைப்படுகிறது. அதற்குக் கூட கையில் பணமில்லை. தயவு செய்து யாரேனும் எனக்கு உதவி செய்யுங்கள்," என சூர்யகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

