இன்றைய நவீன யுகத்திலும் பெண்களுக்கு உரிய சுதந்திரம் கிடைப்பதில்லை என்கிறார் நிவேதா பெத்துராஜ்.
பெண்கள் தங்களுக்கான சுதந்திரத்தைக் கேட்டுப் பெறவேண்டிய நிலையில்தான் இன்னும் உள்ளனர் என்று அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிற மொழி நடிகைகளின் ஆதிக்கம் வலுத்து வரும் நிலையில், 'தமிழ்ப் பெண்கள் அதிகமில்லையே' எனும் ஆதங்கத்தைத் தீர்த்து வைக்க வந்தவர்களில் நிவேதாவும் ஒருவர்.
மதுரைப் பெண்ணான இவர் வளர்ந்தது, படித்தது எல்லாம் துபாயில்தான்.
எனினும் கோடம்பாக்கத்தில் சாதிக்க வேண்டும் எனும் லட்சியத்துடன் சென்னைக்குப் பறந்துவந்து போராடி வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் இணையம் வழி உரையாடியபோது பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் இருப்பதாகக் கருதுகிறீர்களா எனும் கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.
அதற்குதான் மேற்குறிப்பிட்டவாறு பதிலளித்துள்ளார் நிவேதா.
"வேலைக்குச் செல்லும் ஒரு பெண் திருமணம் செய்துகொண்டால் அவள் தொடர்ந்து வேலை செய்வதா அல்லது அதை விட்டுவிட வேண்டுமா என்பதை கணவர்தான் முடிவு செய்கிறார்.
"முன்பு பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது எனும் நிலைமை இருந்தது எனில், இப்போதும் அவள் வேலைக்குச் செல்வது குறித்து முடிவெடுப்பது கணவர் கையில்தான் உள்ளது.
"சில பெண்கள் தங்கள் கணவருக்கு நிலைமையைப் புரியவைத்து எப்படியோ அனுமதி பெற்று வேலைக்குச் செல்கிறார்கள்.
"மற்றவர்களுக்கு அவசியமும் விருப்பமும் இருந்தாலும் விரும்பியபடி செயல்பட முடிவதில்லை. இது வருத்தமளிக்கிறது," என்கிறார் நிவேதா பெத்துராஜ்.
இதற்கிடையே இந்திய சுதந்திர தினத்தையொட்டி உண்மையான சுதந்திரம் என்றால் என்ன என்பது குறித்து நடிகை ஓவியா தன் கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
"சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல, எடுக்கப்படுவது" என்று சுபாஷ் சந்திரபோஸ் கூறியதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவரது இந்தப் பதிவுக்கு ஏராளமானோர் பின்னூட்டமிட்டுள்ளனர். சிலர் இக்கருத்துக்கு உடன்பட இயலாது என்றும் சிலர் ஆதரவாகவும் பதிவிட்டுள்ளனர்.

