பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவர் தற்போது தனிப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
சுவாசிப்பதில் ஓரளவு முன்னேற்றம் இருப்பதாகவும் தனது தந்தை முழுமையாகக் குணமடைய சற்று காலமாகும் என்றும் சரண் கூறியுள்ளார்.
"அப்பா தற்போது குணமடைந்து வருகிறார். எனினும் முழுமையாக குணமடைவது ஓரிரு நாட்களில் நடந்துவிடாது. ஆனால் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். அப்பா நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார்," என்று காணொளிப் பதிவு ஒன்றில் சரண் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தனது தந்தை தற்போது முழுமையான மயக்க நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
"அப்பாவால் மற்றவர்களை அடையாளம் காண முடிகிறது. மருத்துவர்களிடம் பெருவிரலை உயர்த்திக் காட்டுகிறார்," என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். இதற்கிடையே எஸ்.பி.பாலா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதை அறிந்து தாம் மகிழ்ச்சியடைந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

