நடனத்தையும் தன்னையும் பிரிக்கவே இயலாது என்கிறார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
நாள்முழுவதும் நடனம் ஆடச் சொன்னாலும் சலிக்காமல் ஆடத் தயார் என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கு சிறு வயது முதலே நடனத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டாம். எனினும் முறைப்படி நடன வகுப்புக்குச் சென்று கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை என்கிறார்.
"என்னிடமிருந்து பிறரால் பறிக்கமுடியாத ஒரு விஷயம் உள்ளது என்றால் அது நடனம்தான். சிறு வயதில் நடனத்தின் மீதான ஆர்வம் காரணமாக நடன வகுப்பில் சேர்ந்தேன். ஆனால், ஒரு சில நாட்களிலேயே நான் பெறுவது அடிப்படை நடனப்பயிற்சி மட்டுமே என்பதும் நான் என்ன சாதிக்க விரும்புகிறேனோ அதற்கு இத்தகைய பயிற்சி போதாது என்றும் புரிந்துகொண்டேன்.
"என் எதிர்பார்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்கக்கூடிய இடத்தைக் கண்டறிந்தபோது என் குடும்பத்தால் பயிற்சிக்கு செலவழிக்க இயலாது என்பது புரிந்தது. ஒருவேளை என் தந்தையிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தால் அவர் நிச்சயம் நிறைவேற்றி இருப்பார்.
"எனினும் அவர் அதற்காக கடன்தான் வாங்க வேண்டி இருக்கும். அதை உணர்ந்திருந்ததால் அவரிடம் ஏதும் சொல்லவில்லை," என்கிறார் சம்யுக்தா.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறும்வரை தமக்குத் தாமே பயிற்சியாளராக இருந்தாராம். அப்போது ஏதேனும் பெரிய திடல், பூங்கா அல்லது திறந்த வெளிகளுக்குச் சென்று ஆசை தீர, தமக்குத் தெரிந்த வகையில் நடனமாடுவாராம்.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதும் தனக்குள்ள திறமையை நம்பி ஒரு நடனப் பயிற்சியாளரிடம் உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்ததாகக் குறிப்பிடும் சம்யுக்தா, அந்தப் பயிற்சியாளரிடம் இலவசமாக நடனம் கற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் ஒருநாள் இடைவெளி கூட இல்லாமல் தொடர்ந்து நடனம் ஆடமுடியும், பல்வேறு நடன வகைகளைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கணக்குப் போட்டதாகச் சொல்கிறார்.
"அந்த நடன ஆசிரியர் மூலம் மேலும் பல பயிற்சியாளர்களின் அறிமுகம் கிடைத்து எனது திறமையை வளர்த்துக்கொண்டேன். இத்தகைய தொடர்புகள் மூலம் நான் கற்றுக் கொண்ட நடன நுணுக்கங்கள் ஏராளம். எனது நடன ஆசிரியர் நடத்திய பயிற்சி வகுப்புகள்தான் என்னை நன்கு மெருகேற்றியது, கூர் தீட்டியது," என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார் சம்யுக்தா.
அச்சமயம் தினமும் காலை எட்டு மணிக்கெல்லாம் கல்லூரிக்குப் புறப்பட்டு விடுவாராம். பிறகு கல்லூரி முடிந்ததும் நடன உதவியாளர் பணிக்குச் சென்றால் பல மணி நேரங்கள் அங்கேயே கழிந்துவிடுமாம்.
இரவு சுமார் 11 மணி அளவில்தான் வீடு திரும்ப முடியும் என்று சொல்பவர், இதன் காரணமாக தமக்கு சோர்வோ சலிப்போ ஏற்பட்டதில்லை என்கிறார்.
"காரணம், நடனத்துக்காகத்தான் நேரத்தைச் செலவிட்டேன். நடனம் என்பது எனது ஆன்மாவில் கலந்து விட்டது. அதனால்தான் அதை என்னிடமிருந்து எப்போதுமே பிரிக்க இயலாது என்று சொல்கிறேன்.
"எனது மகிழ்ச்சிக்கான அடிப்படையே நடனம்தான். எனது நடனப் பயணத்தில் நான் பலருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
"நடனம் கற்றுக்கொள்வதற்கு வசதியாக ஒரு வேலை அமைந்ததும் அதற்கு ஊதியம் கிடைத்ததும் எனது அதிர்ஷ்டம்.
"எல்லோருக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்துவிடாது," என்று சொல்லும் சம்யுக்தா தமிழ் சினிமாவில் வித்தியாசமான வேடங்களை எதிர்பார்க்கிறாராம்.
குறிப்பாக நடனத்துடன் சம்பந்தப்பட்ட கதை அல்லது கதாபாத்திரங்கள் அமைந்தால் தயக்கமின்றி ஒப்புக்கொள்வேன் என்கிறார்.

