சென்னை: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் (படம்) உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று முன்தினம் அந்த மருத்துவமனை கூறியது.
இம்மாதம் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு கடந்த 14ஆம் தேதி மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் பின்னர் தனி அறையிலும் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
‘எக்மோ’ மற்றும் செயற்கை சுவாசக்கருவிகள் உதவியோடு அவருக்கு சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவித்தது.
நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் மற்ற உறுப்புகளின் செயல்பாடுகள் நன்றாக உள்ளதாகவும் மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப செயல்படும் வகையில் நினைவாற்றல் அவருக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எஸ்பி பாலசுப்பிர மணியத்தின் உடல்நிலை குறித்து அவரது தங்கை எஸ்.பி.சைலஜா ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “எஸ்பிபியின் உடல்நிலை ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
“மருத்துவர்கள் அவருக்கு வென்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அவரது நினைவாற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாகும்
“எனது சகோதரர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.