பின்னணிக் குரல் கொடுக்கும் (டப்பிங்) கலைஞராக இருந்து நடிகராக மாறி முத்திரை பதித்தவர் எம்.எஸ். பாஸ்கர்.
நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என்று எதுவாக இருந்தாலும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் வகையில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பாரதியார் வேடமிட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் அண்மையில் பரவலாகப் பகிரப்பட்டது. கூடவே ஒருசிலர் சில விவகாரங்கள் தொடர்பில் சில கருத்துகளையும் சேர்த்திருந்தனர். இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
அக்குறிப்பிட்ட புகைப்படம் இவர் நடித்த 'தம்பிக்கோட்டை' படத்துக்காக எடுக்கப்பட்டதாம். அதை யாரோ ஒருவர் இணையத்தில் பதிவேற்றி உள்ளார்.
"இதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல. நான் சமூக வலைத்தளங்களில் இயங்கவில்லை. யாரோ ஒருவர் எனது படத்தையும் பெயரையும் பயன்படுத்தி நான் சொல்லாத கருத்துகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். யார் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது," என்கிறார் எம்.எஸ். பாஸ்கர்.
இயக்குநர் விசுவின் 'திருமதி ஒரு வெகுமதி'தான் இவர் அறிமுகமான படம். விசுவை மிகுந்த பாசத்துடன் 'அண்ணா' என்றுதான் குறிப்பிடுகிறார்.
"சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அண்ணா (விசு) வசித்தபோது, தினமும் அவரைச் சந்திப்பேன். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பசி எடுத்தால், என்னை அவர் வீட்டில் பார்க்க முடியும்.
'என்ன பாஸ்கர் இந்தப் பக்கம்?' என்று கேட்பார். 'இந்தப் பக்கமாக வந்தேன். பசி எடுத்ததால் உங்கள் வீட்டுக்கு வந்தேன்' என்பேன். 'முதலில் சாப்பிடு' என்று பாசத்துடன் சொல்வார். இந்தளவு பாசம் காட்டிய என் அண்ணா கொரோனா ஊரடங்கின்போது காலமானார்.
"அவரது இறப்புக்குக் கூட நேரில் செல்ல முடியாத சோகம் வாழ்நாள் முழுதும் என் மனதில் இருக்கும். 'டயாலிசிஸ்' பிரச்சினை காரணமாக அண்ணா மிகவும் சிரமப்பட்டார். என் சொந்த சகோதரரை இழந்ததாக உணர்கிறேன்," என்று சொல்லும் எம்.எஸ். பாஸ்கர், தமிழ் சினிமாவின் நடப்பு உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
நடிகர் நாகேஷ், ஆச்சி மனோரமா, ஆகிய இருவரும்தான் இவரது 'ரோல் மாடல்'களாம். அவர்களைப் போல் தனது வேலையை மிகக் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்கிறார்.
"கஷ்டப்படாமல் எதையுமே சாதிக்க முடியாது. இதை எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்கள். அதேசமயம் சாதித்த பிறகும்கூட இப்போது படப்பிடிப்புக்குச் செல்லும்போது, நடிக்க வந்த முதல் நாள் போலவே பொறுப்புடன் செயல்பட்டால் தலைக்கனம் வராது. மேலும் பிறர் சொல்வது சரியாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதும் நம் உதவியை நாடுபவர்களுக்கு முடிந்ததைச் செய்வதும்தான் பெருமை," என்கிறார் எம்.எஸ். பாஸ்கர்.
கமல்ஹாசன் குறித்து மணிக்கணக்கில் பேசுபவர், அவருடன் இதுவரை இணைந்து நடித்தது போதாது என்றும் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.
"என்னுடைய 17ஆவது வயதில்தான் கமல் அண்ணாவை முதல் முதலாகப் பார்த்தேன். 'அன்னை வேளாங்கண்ணி' படத்தில் அவர் பணியாற்றிய நேரமது. பின்னர் 'தேவர் மகன்', 'மகாநதி' படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தபோது சந்தித்தேன். 'தசாவதாரம்' படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன்.
"'பாபநாசம்' படத்தில் இஸ்லாமியராக திருநெல்வேலி வட்டார மொழியில் பேசி நடித்திருப்பேன். படப்பிடிப்பின்போது அண்ணாவுடைய (கமல்) கார் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தால் முதல் ஆளாக ஓடிச்சென்று கார் கதவைத் திறப்பேன். இதை அவருக்குச் செய்யக்கூடிய சேவையாகக் கருதுகிறேன்.
"அவரும் காரிலிருந்து இறங்கியதும் 'அஸ்ஸலாமு அலைக்கும் பாய்' என்று மறக்காமல் சொல்வார். அவருடன் செலவிடும் ஒவ்வொரு நொடியும் உற்சாகமளிக்கும். இப்படிப்பட்ட கலைஞர்களுடன் திரையுலகில் நீடிக்கும் வரை தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் எம்.எஸ். பாஸ்கர்.

