சூர்யாவுடன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தது கனவு போல் உள்ளது என்கிறார் படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி.
‘8 தோட்டாக்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்து ஜி.வி. பிரகாஷுடன் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘சர்வம் தாளமயம்’ படத்தில் நடித்துள்ளார்.
மூன்றாவது படத்திலேயே சூர்யாவுடன் ஜோடி சேர்ந்ததை நம்பவே முடியவில்லை என்று கண்கள் விரித்து ஆச்சரியப்படுகிறார் அபர்ணா.
“சூர்யா சார் தொழில் பக்தியும் தீவிர ஈடுபாடும் கொண்டவர். படப்பிடிப்பின்போது அவர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியதைக் கண்டு பிரமித்துப் போனேன்.
“தினமும் எடுக்கப்படும் காட்சிகள், அவற்றுக்கான சூழல், வசனங்கள் ஆகியவற்றில் மட்டுமே அவரது கவனம் இருக்கும். அதனால் அவரிடம் வேறு எதையும் பேசமுடியவில்லை. “குறைந்தபட்சம் அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை. முதல்கட்டப் படப்பிடிப்பின் கடைசி நாளன்றுதான், ‘உங்களோடு ஒரு படம் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றேன். ‘ஏன் இத்தனை நாள் கேட்கவில்லை’ என்று சிரித்தபடி புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படம் நிச்சயம் தமிழ் ரசிகர்களால் வரவேற்கப்படும்,” என்று சொல்லும் அபர்ணா, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாம்.
இவரது சொந்த ஊரான கேரளாவில் இயங்கும் விஜய் ரசிகர் மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளாராம்.
“விஜய் சாரின் படங்கள் வெளியான முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கவேண்டும் என துடிப்பேன். ரசிகர்களோடு சேர்ந்து அவரது பிறந்தநாளை ஆதரவற்றோர் அமைப்புடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறேன். ‘சர்க்கார்’ படத்தை முதல் நாளன்றே பார்த்த அனுபவத்தை மறக்க இயலாது.
“விஜய் சார், சூர்யா சார் படங்களுக்கு தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பெரும் வரவேற்பு கிடைக்கும். மோகன்லால் சார், மம்முட்டி சார் படங்களுக்கு இணையாக இவர்களுடைய படமும் கொண்டாடப்படும்.
“சூர்யா சார் நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’, ‘காக்க காக்க’ படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. விஜய் சாரின் நடனம் ரொம்பப் பிடிக்கும்,” என்று சொல்லும் அபர்ணாவின் தந்தை பாலமுரளி ஓர் இசையமைப்பாளர். அம்மா பின்னணிப் பாடகி.
கேரளாவின் திருச்சூர் நகரில் பிறந்தவர். பின்னர் கோவையில் குடியேறி விட்டார். மலையாளத்தில் பகத் பாசிலுடன் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து சில படங்களில் நடித்த பிறகு தமிழில் அறிமுகமானார். முதல் படமான ‘8 தோட்டாக்கள்’ படப்பிடிப்பின்போது சற்றே தட்டுத் தடுமாற நேரிட்டதாகச் சொல்கிறார் அபர்ணா.
“காரணம் அப்போது தமிழில் சரளமாகப் பேச வராது. சுற்றிலும் தமிழ் ஆட்கள் இருந்ததால் எப்படி வசனங்களை சரியாகப் பேசி நடிக்கப் போகிறோம் எனும் பதற்றம் இருந்தது. ஆனால், அரை மணி நேரத்துக்குள் படக்குழுவில் இருந்த அத்தனை பேரும் மிக இயல்பாகப் பேசிப் பழகினார்கள். இப்போது தமிழ் சினிமா எனக்குப் பிடித்தமான களமாகி விட்டது,” என்று சொல்லும் அபர்ணா, ‘சூரரைப் போற்று’ படத்தில் மதுரை வட்டார மொழியில் பேசி நடித்துள்ளாராம்.
இதற்காக பல நாட்கள் பயிற்சி பெற்றுள்ளார். நடிகை கலைராணி நடத்தும் பயிற்சிப் பட்டறையில் சில நாட்கள் பங்கேற்றாராம். பிறகு படப்பிடிப்பு தொடங்க இருந்த ஒரு வார்த்துக்கு முன்பே மதுரைக்குச் சென்று தங்கியுள்ளார்.
“அங்கு மதுரைத் தமிழில் பேசுவது கைதேர்ந்தவரான சத்யா அக்கா எனக்கு வெகுவாக உதவினார். இப்படிப்பட்ட பயிற்சி மற்றும் உழைப்பு காரணமாக பின்னணிக் குரல் பதிவை ஐந்தே நாட்களில் முடித்து விட்டேன்.
“இதற்கு படத்தின் இயக்குநர் சுதா மேடம்தான் காரணம். படப்பிடிப்பின்போது ஒவ்வொரு காட்சிக்கும் நமக்கு ஊக்கமளிப்பார். அவருடன் பணியாற்றுவது உற்சாகமான அனுபவம். இந்தப் படத்தில் எனது நடிப்பு ரசிகர்களால் பேசப்பட்டால் அதற்கு அவர்தான் காரணம். இப்படிப்பட்ட படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்,” என்கிறார் அபர்ணா பாலமுரளி.