எந்த விஷயத்தையும் வெளிப்படையாகப் போட்டு உடைப்பதுதான் விஜய் சேதுபதியின் வழக்கம்.
சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பேசும்போது திரைத்துறை சார்ந்த விஷயங்கள் குறித்து மட்டுமல்லாமல், சமூகம் சம்பந்தப்பட்ட கருத்துகளையும் தைரியமாக வெளிப்படுத்துவார்.
அந்த வகையில் தற்போது தாம் நடித்துவரும் 'லாபம்' படம் தொடர்பாக சேதுபதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியானது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சேதுபதி.
"தொழிற்சாலை இயங்கினால்தான் விவசாயம் சாத்தியம். அப்போதுதான் மக்கள் வாழ முடியும் என்று நம்ப வைத்து விட்டனர். ஆனால், விவசாயம் செய்தால் மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்கமுடியும். அதுதான் உண்மை," என்ற வரிகளைக் குறிப்பிட்டுள்ளார் சேதுபதி.
இந்த வசனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஏராளமானோர் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே நடிகை டாப்சி நடிக்கும் படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார் சேதுபதி. 'காஞ்சனா-2', 'வை ராஜா' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள டாப்சி தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் அண்மைக்காலங்களில் வெளியான 'பிங்க்', 'மிஷன் மங்கள்' உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார் டாப்சி.
தமிழில் ஜெயம் ரவியுடன் 'ஜனகனமண' படமும் இவரது கைவசம் உள்ளது.
இந்நிலையில் பெயரிடப்படாத புதிய தமிழ்ப் படத்தில் டாப்சியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.
சில காட்சிகளில் வந்தாலும் வழக்கம்போல் தனி முத்திரை பதிக்கும் கதாபாத்திரமாக இருக்கும் என்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சேதுபதி தெரிவித்துள்ளார்.
'லாபம்' படத்தை விஜய் சேதுபதி தான் தயாரிக்கிறார். கொரோனா விவகாரத்தால் பட வெளியீடு தள்ளிப் போயுள்ள நிலையில், மேலும் இரு படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்.
அதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் அளித்து வருகிறாராம்.

