தமிழ்த் திரையுலக ரசிகர்களைக் கிறங்கடிக்கும் மும்பை நாயகிகளில் ஒருவர்தான் வேதிகா. எனினும் இவருக்கும் மற்ற மும்பை நாயகிகளுக்கும் இடையே முக்கிய வித்தியாசம் உள்ளது. அது வேதிகாவுக்கு சரளமாகத் தமிழ் பேசத் தெரியும் என்பதுதான்.
ஊரடங்கு வேளையில் நாள் தவறாமல் சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவிடுகிறார் வேதிகா. இன்ஸ்டகிராமில் அவ்வப்போது புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்து ரசிகர் களைக் கிறங்கடிக்கிறார்.
தமிழ், இந்தி, கன்னடம் என மும்மொழிகளில் வெளியாகும் இவரது பதிவுகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. வேதிகாவின் சொந்த ஊர் மும்பை. அங்கு பிறந்து வளர்ந்தாலும் தென்னிந்தியாவில்தான் அதிக தொடர்புகளை வைத்திருக்கிறார்.
"சினிமாவில் நடிப்பேன் என்றோ அதிலும் தென்னிந்தியாவில் இருந்துதான் எனது திரைப்பயணம் தொடங்கும் என்றோ நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
"பொதுவாக எனக்குப் பல மொழிகளில் பேசும் ஆர்வம் அதிகம். அதனால் அவற்றைக் கற்றுக் கொள்கிறேன். அந்த வகையில்தான் தமிழ், இந்தி, கன்னடம் என்று நடிக்கத் தொடங்கியதும் அவற்றைக் கற்றுக்கொண்டேன்," என்று விளக்கமளிப்பவர், தற்போது மேலும் மூன்று மொழிகளில் பேசக் கற்று வருகிறார் என்பதுதான் முக்கியத் தகவல்.
மொழியை நன்கு புரிந்துகொண்டு நடிக்கும்போது ரசிகர்களைக் கூடுதலாக ஈர்க்க முடியும் என்று நம்புகிறாராம்.
வேதிகாவின் நடன அசைவுகளுக்கு ரசிகர்கள் பலர் அடிமை. சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் அதிகமாம். குறிப்பாக நடிகைகள் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி நடனங்கள் ரொம்பப் பிடிக்குமாம்.
திரைப்படங்களில் அவர்கள் ஆடுவதைப் பார்த்து வேதிகாவும் அதேபோல் ஆடிப் பயிற்சி எடுத்திருக்கிறார். அதன் பலனாக பள்ளி, கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியுள்ளார்.
எனினும் ஒரு கட்டத்தில் ஆசிரியை ஆகவேண்டும் என்பதுதான் வேதிகாவின் கனவாக இருந்துள்ளது. தூக்கத்தில் வரும் கனவில்கூட ஆசிரியையாகத்தான் தோன்றுவாராம்.
"ஆனால் கல்லூரியில் படித்தபோது ஸ்ரீதேவியின் 'மூன்றாம் பிறை' படம் பார்த்தேன். அதன் பிறகு நடிப்பின்மீது ஆர்வம் ஏற்பட்டது. சினிமாதான் எதிர்காலம் என்று முடிவு செய்ததும் அதற்குத் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.
"அதன்பிறகே முறைப்படி நடனம் கற்றுக்கொண்டேன். நடிப்புப் பயிற்சியும் பெற்றேன். இவையெல்லாம் என் திரைப்பயணத்துக்கு உதவிகரமாக இருந்தன. தமிழில் நடிக்கத் தொடங்கியபோது தென்னிந்திய சினிமா உலகம் குறித்து எதுவுமே தெரியாது. இங்கு வந்த பிறகுதான் இதன் உண்மையான பிரம்மாண்டம் பிடிபட்டது. தென்னிந்தியக் கலைஞர்களுக்கு மட்டும் நாடு தழுவிய அளவில் வரவேற்பு இருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொண்டேன்," என்று சொல்லும் வேதிகா, நடனத்தை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடிக்க விருப்பம் கொண்டுள்ளார்.
இதுவரை தனக்குரிய படங்களைத் தாமே தேர்வு செய்ததாகக் கருதவில்லையாம். மாறாக, படங்கள்தான் தம்மைத் தேர்வு செய்ததாகக் கருதுகிறாராம்.
வேதிகாவுக்கு காதல் அனுபவம் உண்டு. எனினும் அந்த முதல் காதல் தொடங்கிய வேகத்திலேயே முடிவுக்கும் வந்துவிட்டது.
"ஒரு கட்டத்தில் தனிமையில் இருக்கவே அதிகம் விரும்பினேன். யாருடைய தொந்தரவும் இல்லாமல் வீட்டில் என் அறையில் முடங்கி இருப்பேன். பாடல்கள் கேட்பது, புத்தகம் படிப்பது, சமூக வலைத்தளங்களில் உலவுவது என அந்தத் தனிமையைப் பின்னர் இனிமையானதாக மாற்றியிருக்கிறேன்.
"பிறகு ஒருநாள் எல்லாருடனும் சகஜமாக பேசிப் பழக வேண்டியது அவசியம் என்ற எண்ணம் தோன்றியதும் முதலில் என் அம்மாவுடன் அதிக நேரம் செலவிட்டேன். பிறகு நெருக்கமானவர்களுடன் பேசத் தொடங்கினேன். ஆனால், இப்போது யாருடனும் காதல் இல்லை," என்கிறார் வேதிகா.
எந்தச் சூழ்நிலையிலும் சுத்தம் சுகாதாரம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் கொரோனா காலத்தில் மேலும் கறார் பெண்ணாகி விட்டார்.
"நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் திரைப்படங்களில் நான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களும் அமைந்துள்ளன. எனது வருங்காலக் கணவர் குறித்து சில எதிர்பார்ப்புகள் உள்ளன. மிகுந்த பொறுமைசாலி ஒருவரைத்தான் நான் தேர்வு செய்வேன். அப்படிப்பட்ட ஒருவரால்தான் என்னைச் சமாளிக்க முடியும்.
"தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடிக்கிறேன். கன்னடத்தில் நடிகர் உபேந்திராவுடன் ஒரு படமும் இந்தியில் இம்ரான், ரேஷ்மியோடு ஒரு படமும் தயாராகி வருகின்றன," என்று உற்சாகத்துடன் சொல்கிறார் வேதிகா.

