‘சூரரைப் போற்று’ இணையத்தில் நேரடியாக வெளியாவதை அடுத்து இதர முன்னணி நடிகர்களின் படங்களை வாங்குவதில் இணைய நிறுவனங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன.
அந்த வகையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படம் இணையத்தில் நேரடியாக வெளியாகுமா? எனும் பேச்சும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. பிரபல இணைய நிறுவனம் ஒன்று ‘மாஸ்டர்’ படத்துக்கு 100 கோடி ரூபாய் அளிக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை ‘மாஸ்டர்’ தயாரிப்பு தரப்பே எதிர்பார்க்கவில்லை என்றும் ஒருவேளை இப்படம் இணையத்தில் வெளியானால் தமிழ்த் திரையுலகில் பல்வேறு பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் தரப்பில் கூறப் படுகிறது.
இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் 100 கோடிக்கும் அதிகமான தொகை கிடைத்தால்தான் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்றொரு பேச்சும் நிலவுகிறது. எனவே அதன் விற்பனை ரூ.100 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“இணைய நிறுவனங்கள் 100 கோடி தர முன்வந்திருப்பது நல்ல விஷயமாகப் பார்க்கப்பட்டாலும் ‘மாஸ்டர்’ படத்துக்கு அதைவிட அதிக தொகையைத் தயாரிப்புத் தரப்பு எதிர்பார்ப்பதில் தவறில்லை. காரணம் விஜய்யின் சம்பளம், அவரது படத்துக்கான ஒட்டுமொத்த செலவுகள் நிச்சயம் அதிகமாக இருக்கும்.
“எனவே, 100 கோடி என்பது போதுமானதாக இருக்காது. அதனால்தான் திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். ஒருவேளை திரையரங்குகளில் எவ்வளவு வசூல் கிடைக்கும் என்று விஜய் தன் மனதில் கணக்கிட்டுள்ள ஒரு தொகையை இணைய வெளியீட்டு நிறுவனங்கள் கொடுக்க முன்வந்தால் விஜய் தன் முடிவை மாற்றிக்கொள்ளும் அதிசயம் நிகழக்கூடும். இல்லையெனில் ‘மாஸ்டர்’ திரையரங்குகளில்தான் வெளியாகும்,” என்று கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே விஜய் மற்றும் ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் மனம் மாறி அப்படத்தை இணையத்தில் நேரடியாக வெளியிட ஒப்புக்கொண்டு விடக்கூடாது என்ற கவலை திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிப்பாளர்களுக்கும் உள்ளது. எனவே, இருவரிடமும் தொடர்ந்து பேசி வருகிறார்களாம். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் ‘மாஸ்டர்’ படம் மட்டுமே தமிழகம் முழுவதும் திரையிடப்படும் என்று அவர்கள் உறுதி அளித்திருப்பதாகத் தெரிகிறது.
மேலும் ‘மாஸ்டர்’ வெளியான 10 தினங்களுக்குப் பிறகுதான் அடுத்த படத்தை திரையிடுவது என்ற முடிவிலும் இருக்கிறார்களாம். எனவே, விஜய் எதிர்பார்த்ததை விட அதிக தொகை வசூலாக வாய்ப்புள்ளதாகவும் அத்தரப்பு கூறிவருகிறது.
‘மாஸ்டர்’ படக்குழுவிடமிருந்து எந்தவித அதிகார தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே ‘தளபதி 65’ படம் குறித்து சில முக்கிய தகவல்களை அதன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இது ‘துப்பாக்கி’யின் இரண்டாம் பாகம் என்றும் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இத்தகைய தகவல்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்கிறார் முருகதாஸ். அண்மைய பேட்டியில், விஜய் படத்துக்கான தலைப்பை தயாரிப்புத் தரப்பு தம்மிடம் சொல்லவில்லை என்று வெளியான தகவல் அப்பட்டமான பொய் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“‘தளபதி 65’ படம் தொடர்பாக எந்தச் சிக்கலும் எழவில்லை. மேலும் அது ‘துப்பாக்கி’யின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறு கதைக்களமாக இருப்பதுதான் நல்லது என்பது என் கருத்து.
“ஒரு படத்தின் தொடர்ச்சி என்பது நம்மை ஒரு வட்டத்துக்குள் போட்டு அடைப்பது போல் இருக்கும். அதைக் கடந்து நாம் யோசிக்க வேண்டும். ‘தளபதி 65’ என்ன மாதிரியான படமாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து முறையான அறிவிப்பு வந்தால்தான் சரியாக இருக்கும்,” என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.