கார்த்திக் ராஜுவின் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் 'பிக்பாஸ்' புகழ் ரைசா வில்சன். இது திகில் படமாக உருவாகிறதாம்.
தற்போது 'சூர்ப்பனகை' என்ற படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் ராஜு. ஊரடங்கால் அதன் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி புதிதாக ஒரு கதையை எழுதி உள்ளாராம். அதை வைத்து உருவாகும் படத்தை அவரே தயாரிக்க உள்ளார்.
"ஒரு தாய், அவரது மகள் மற்றும் பதின்ம வயது இளையர் ஆகிய மூவரையும் மையமாக வைத்து கதைக்களத்தை அமைத்திருக்கிறேன். ரைசாவும் ஹரிஷ் உத்தமனும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். பாலசரவணன், காளி வெங்கட், 'கைதி'யில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகா ஆகியோரும் உள்ளனர். படத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் பல இருக்கும்," என்கிறார் கார்த்திக் ராஜு.

