கொரோனா கிருமி புண்ணியத்தால் முன்னணி நாயகிகள் பலரும் நடிப்பதைத் தவிர்த்து தங்களிடம் உள்ள இதர பல திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றனர்.
சமூக வலைத்தளப் பக்கங்களைத் திறந்தால் நடிகைகள் பலரும் பாடுவது, ஆடுவது, சமையல் செய்வது, விளையாடுவது, உடற்பயிற்சி, யோகா செய்வது என்று காணொளிப் பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றன.
சிலர் கதை எழுதுகிறார்கள். இன்னும் சிலரோ படங்களை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன் திறமையை வளர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக உதவி இயக்குநருக்கான பணிகளைக் கற்றுக்கொண்டுள்ளாராம்.
மேலும் பட்டப்படிப்பு மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம். தற்போது துல்கர் சல்மான் தயாரிப்பில் 'மணியாரயிலே அசோகன்' என்ற மலையாளப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் அனுபமா. இப்படம் சில தினங்களில் இப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாக உள்ளது.
இதில் நடித்ததோடு மட்டுமல்லாமல் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளாராம். இதனால் ஊரடங்கின்போதும்கூட படத்தின் தொழில்நுட்பப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
கேரள அரசாங்கத்தின் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி பின்னணி இசை மற்றும் குரல் பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றில் பங்கேற்று பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாராம். தமது இந்த அனுபவங்கள் குறித்து அவ்வப்போது இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகிறார்.
அனுபமாவுக்கு தற்போது 24 வயதாகிறது. தகவல் தொடர்புத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர், ஐந்தாண்டுகளுக்கு முன்பு திரையுலகில் அறிமுகமானதால் படிப்பைப் பாதியில் கைவிட நேர்ந்தது. தற்போது மீண்டும் படிப்பின்மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். எனவே தொலைதூரக் கல்வி முறையில் பட்டப்படிப்பு மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
"மலையாளத்தில் தற்போது நாயகியை மையப்படுத்தும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைய சில மாதங்களில் அதுபோன்ற சில கதைகளை நானும் கேட்க நேர்ந்தது. அவற்றுள் சில என்னைக் கவர்ந்துள்ளன. அவற்றில் நடிப்பது குறித்து யோசித்து வருகிறேன்.
"தமிழில் 'கொடி'க்குப் பிறகு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததில் வருத்தமுண்டு. போதாதக் குறைக்கு ஊரடங்கும் வேறு பல தொடர்புகளைத் துண்டித்து விட்டது. விரைவில் தமிழில் ஒரு சுற்று வருவேன்," என்கிறார் அனுபமா.
எனினும் தமிழில் உருவாகும் இரண்டு இணையத் தொடர்களில் நடிக்கக் கேட்டு இவரை அணுகியுள்ளனராம். சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் பட்சத்தில் இரு தொடர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகக்கூடும்.
நடிகை கீர்த்தி சுரேஷ் சூர்ய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலையைச் செய்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கின்போது தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளும் நடிகைகளின் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்.
குறிப்பாக தினமும் காலையில் 150 முதல் 200 முறை சூரிய நமஸ்காரம் செய்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி.
"நான் சொன்னபடி செய்துபாருங்கள். உடலில் ரத்த ஓட்டம் சீராகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒட்டுமொத்த உடல் இயக்கமும் புதுப்பிக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தான் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதற்காக கணிசமான நேரத்தை ஒதுக்குவதாகச் சொல்கிறார்.
தான் உடற்பயிற்சி, யோகா செய்யும் காணொளிப் பதிவுகளையும் அவர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

