சின்னத்திரை நடிகையாகியுள்ளார் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா.
பிரபல தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் இவர் நடித்துவரும் தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
தந்தையைப் போலவே இவருக்கும் சினிமாவில் நடிக்க விருப்பம். ஆனால் லிவிங்ஸ்டனுக்கோ தன் குடும்பத்திலிருந்து யாரும் சினிமாவுக்கு வரக்கூடாது என்பதே கொள்கை.
"அதையும் மீறி எப்படியோ தந்தையை சமாதானப்படுத்தி அவரது சம்மதத்துடன் நடிக்கத் துவங்கினேன்.
"இந்த ஊரடங்கு வேளையில் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று விரும்பியபோதுதான் வாய்ப்பு தேடி வந்தது," என்கிறார் ஜோவிதா
முன்னதாக இவர் இயக்குநர் பாரதிராஜாவின் படத்தில்தான் அறிமுகமாக இருந்தாராம். எனினும் சில காரணங்களால் இந்தப் படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வருத்தத்தில் இருந்த மகளைத் தேற்றிய லிவிங்ஸ்டன், புதிய வாய்ப்பு வரும் வரை நம்பிக்கையுடன் காத்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தினாராம்.
"முதன்முதலாக பாரதிராஜா சார்தான் என்னை நடிக்க அழைத்தார். ஆனால், சினிமா துறையில் பல்வேறு அவமானங்களை எதிர்கொண்டவர் அப்பா.
"அவர் நாயகனாக நடித்தபோது பலரும் விமர்சித்துள்ளனர். இதையெல்லாம் தாங்கிக்கொண்டு அவர் நாயகனாக நடித்த படம் ஒன்றுகூட சோடை போகவில்லை. எல்லாமே வெற்றிப் படைப்புகள்தான்.
"உதவி இயக்குநராகப் பணியாற்றியபோதும் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால்தான் எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் சினிமாவுக்கு வரக்கூடாது என்று அவர் உறுதியாக இருந்தார்.
"ஆனால் எனக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பிலும் இசையிலும் ஆர்வம் அதிகம். எனவே, சினிமாவுக்கு வந்தாலும் நான் பாடகியாக பேரெடுக்கவேண்டும் என்பதே அப்பாவின் விருப்பமாக இருக்கும். எனினும் நான் ஆசைப்பட்டபடி நடிகையாகி விட்டேன்," என்கிறார் ஜோவிதா.
நடிகர் விஜய் இவரது குடும்ப நண்பராம். பாரதிராஜா படத்தில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தபோது தொடர்புகொண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
"விஜய் சார் என்னை ஜோ என்றுதான் கூப்பிடுவார். அவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து குறுந்தகவல் அனுப்புவேன். அவரும் அழகான வரிகளுடன் பதில் அனுப்புவார்.
"அப்பாவுக்கு என்மீதும் தங்கை மீதும் பாசம் அதிகம். அம்மாவையும் எங்களையும் பிரிந்திருக்கவே மாட்டார். வெளியூர் படப்பிடிப்பு என்றாலும் ஒருவாரத்துக்கும் மேல் தொடர்ச்சியாக நடிக்க மாட்டார். கடந்தாண்டில்தான் முதன்முறையாக கிறிஸ்மஸ் சமயத்தில் அப்பாவுடன் இருக்க முடியவில்லை. ரஜினி அங்கிளுடன் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார்.
"எனினும் பிறகு எங்களை ஹைதராபாத்துக்கு வரவழைத்து ரஜினி சாருடன் சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாட வைத்தார். அப்போது ரஜினி அங்கிளுக்கு ஒரு சட்டை பரிசளித்தோம்.
"அவர் அதை மறுநாளே போட்டு வந்து எங்கள் முன் வந்து நின்ற போது இன்ப அதிர்ச்சியாக இருந்தது," என்று சொல்லும் ஜோவிதாவுக்கு விஜய்க்குத் தங்கையாகவும் ரஜினிக்கு மகளாகவும் நடிக்க ஆசையாம்.
இதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் சம்பளமே வேண்டாம் என்று கூறவும் தயார் என்கிறார்.
"காரணம், எனக்கு இவர்கள் இருவரையுமே ரொம்பப் பிடிக்கும். இருவருமே பெரிதாகச் சாதித்துக் காட்டியவர்கள்.
"மற்றபடி அப்பாவின் அறிவுரைகளை முறையாகப் பின்பற்றுவேன். சாதித்துக் காட்டுவேன்," என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் ஜோவிதா.

