கொரோனாவின் பேயாட்டத்தால் திரையுலகம் முடங்கிக் கிடக்கிறது. இதனால் லைட்மேன்கள் முதல் உச்ச நடிகர்கள் வரை அனைவருக்கும் வருமானம் பறிபோய்விட்டது.
ஆனால் இந்தச் சோதனையான காலகட்டத்திலும் சிலர் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு சம்பாதித்து வருகிறார்கள். இவர்களுக்குக் கைகொடுப்பது ‘யூடியூப்’, இணையத் தொடர்கள், திறன்பேசி செயலிகள் ஆகியவைதான்.
நடிகைகள் ஷ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட நடிகைகள் சிலர் சொந்தப் பெயரில் ‘யூடியூப்’ சேனல்கள் தொடங்கியுள்ளனர்.
சினிமா மூலம் கிடைத்த புகழும் ரசிகர்களும் கைகொடுப்பதால் இவர்களுடைய ‘யூடியூப்’ அலைவரிசையில் லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாக சேர்கின்றனர்.
இசையமைப்பாளர் இமான் வெற்றி பெற்ற தனது பாடல்களை உருவாக்கிய விதம், அவை படமாக்கப்பட்ட விதம், அப்போது கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றைத் தனது சேனலில் விலாவாரியாகப் பேசிவருகிறார்.
தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற சேனலை நடத்துகிறார். அதற்கு கிடைத்த வரவேற்பு உற்சாகப்படுத்த டூரிங் சினிமாஸ், ஆன்மீக டாக்கீஸ் என்று மேலும் பல தலைப்புகளில் அவர் ‘யூடியூப்’பில் வலம்வருகிறார். இப்படி சினிமா பிரபலங்கள் மட்டுமல்லமால் சின்னத்திரை கலைஞர்களும் தங்கள் பங்குக்குப் புகுந்து விளையாடுகின்றனர்.
இசையால் அசத்தும் ஷ்ருதி
ஷ்ருதி சொந்தமாக ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிடுகிறார். சினிமாவுக்கு நடிப்பு, ‘யூடியூப்’புக்கு இசை என்று தனித்தனியே திறமையை வெளிப்படுத்தி வருபவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
“எப்போதுமே ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதில்தான் எனக்கு விருப்பம். அதனால்தான் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்குகிறேன். ‘யூடியூப்’பில் எனது உண்மையான படைப்புகளை காண முடியும். இந்தப் பயணமும் மகிழ்ச்சி தருகிறது,” என்கிறார் ஷ்ருதி.
மனோபாலாவின் ‘வேஸ்ட் பேப்பர்’
இயக்குநர் மனோபாலா ‘வேஸ்ட் பேப்பர்’ என்ற சேனல் நடத்துகிறார்.
“வாழ்க்கையில் எதையுமே வேஸ்ட் (பயனற்றது) என்று சொல்லக்கூடாது. அனைத்துமே பயன்தரக்கூடியவைதான். குப்பையில்கூட கோமேதகம் கிடைக்கும். அதனால்தான் இப்படியொரு பெயர் வைத்தேன்.
“ஒன்றரை ஆண்டுகளாகவே ‘யூடியூப்’ சேனல் தொடங்க வேண்டும் என்று எனக்கு விருப்பம். இத் துறையில் சாதித்தவர்களைக் கவனித்தேன். என் பலம் சினிமா. அதனால் சினிமாவையே தலைப்பாகக் கொண்டு நான் சேனல் தொடங்கி ஓராண்டு ஆகிறது. அதற்குள் இரண்டரை லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
“சித்ரா லட்சுமணன் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சேனல் தொடங்கினார். அவருக்கு மூன்றரை லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். சினிமாவில் நடிப்பதால் என் முகத்தை அடையாளம் கண்டு நிறைய பேர் என் சேனலைப் பார்க்கிறார்கள்.
“‘யூடியூப்’ மூலம் மேலும் பிரபலமாவதுடன் வருமானமும் கிடைக்கிறது. இனி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமையல் கலை உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்தும் பேசுவதற்குத் தனித்தனி சேனல்கள் தொடங்குவேன்,” என்கிறார் மனோபாலா.
‘இனி தீவிரமாக இயங்குவேன்’
‘சென்னை-28’ படத்தின் நாயகியும் இயக்குநர் அகத்தியனின் மகளுமான விஜயலட்சுமி ‘இட்ஸ் விஜி’ (it’s VG ) என்ற பெயரில் சேனல் தொடங்கி உள்ளார். இது இவரது நீண்ட நாள் விருப்பமாம். ஊரடங்கின்போதுதான் சேனல் தொடங்க முடிந்ததாம்.
“கார்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதனால் என்னிடம் உள்ள சிறிய ரக காரை வைத்து ‘வீல்ஸ் வித் விஜி’ என்ற பகுதியை வெளியிட்டேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து வெளியாகும் பகுதிகள் வித்தியாசமான தலைப்பு, கருப்பொருளுடன் இருக்கும்.
“இதில் என் கணவரும் உதவி செய்கிறார். எனது காரை வைத்து எடுக்கப்பட்ட பகுதிக்கு முழு ஆலோசனையும் அவர் கொடுத்ததுதான்,” என்று சொல்லும் விஜியும் அவரது கணவர் ஃபெரோஸும் ஊரடங்கின்போது ஒரு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து ஒரு திகில் நிறைந்த குறும்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளனர். இதற்கும் பலத்த வரவேற்பு கிடைத்ததால் முன்னைவிட இத்தளத்தில் தீவிரமாக இயங்க முடிவு செய்துள்ளனராம்.
தகவல் பகிரும் பாடகி
‘தனி ஒருவன்’ படத்தில் ‘கண்ணால கண்ணால’, ‘உத்தம வில்லன்’ படத்தில் ‘காதலாம் கடவுள்’ உள்ளிட்ட வெற்றிப் பாடல்களைப் பாடிய பத்மலதாவும் இப்போது ‘யூடியூப்’ பிரபலம். ஒரு பாடல் உருவாகும் விதம், அதில் இடம்பெற்றுள்ள ராகம் ஆகியவை குறித்து அழகாக விவரிக்கிறார் பத்மலதா.
அசத்தும் ‘அம்பானி’ சங்கர்
வடிவேலுவின் நகைச்சுவைக் குழுவில் இணைந்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர் அம்பானி சங்கர். ‘தர்ஸ்டி க்ரோ’ (Thirsty crow) என்ற பெயரில் சேனல் நடத்தும் இவரை ஒரு லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதுவரை 64 பகுதிகளை தனது சேனலில் வெளியிட்டுள்ளார். இவற்றுள் ‘அன்னம்’ என்ற பகுதி நைஜீரியாவில் நடந்த விழாவில் பரிசு பெற்றுள்ளதாம்.
“சிறு கதாபாத்திரங்களில் நடித்ததால் என் முகம் ரசிகர்களுக்கு தெரியும். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’யில் பெரிய கதாபாத்திரத்தில் நடித்ததால் நன்கு பிரபலமானேன். அதன்பிறகு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே என்னை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று சொல்லும் அம்பானி சங்கர் பாக்யராஜின் கதை விவாதக் குழுவில் பணியாற்றி உள்ளாராம்.
“அந்த அனுபவத்தில் சில இயக்குநர்களின் கதை விவாதத்தில் பங்கேற்றேன். பிறகு ‘யூடியூப்’ சேனல் துவங்கும் எண்ணம் ஏற்பட்டது. தயாரிப்பாளர்களை அணுக வசதியாக இருக்கும் என்று எண்ணித் தொடங்கிய சேனல் இப்போது வேகமாக வளர்கிறது. நகைச்சுவைப் பகுதிகளை உருவாக்குகிறேன். அடுத்து இணையத் தொடர்களை இயக்கும் திட்டம் உள்ளது,” என்கிறார் அம்பானி.