ஸ்ரேயா சரண் நடிக்கும் புதிய படத்துக்கு 'கமனம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். சுஜனா ராவ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
திருமணத்துக்குப் பிறகு ஸ்ரேயாவை அதிக படங்களில் காணமுடியவில்லை. இந்நிலையில் ஊரடங்கின்போது கிடைத்த நீண்ட ஓய்வு மீண்டும் திரைப்படங்களில் முழுக்கவனத்தைத் திருப்புமாறு தூண்டியுள்ளதாம். இதனால் பல மொழிகளிலும் நடிக்கத் தயாராகி வருகிறார்.
ஊரடங்கின்போது பலவிதமான கதைகளைக் கேட்டு அவற்றுள் சிலவற்றில் நடிப்பது என முடிவெடுத்துள்ளார். 'கமனம்' படத்தின் பாதி வேலைகள் முடிந்துவிட்டதாம்.
"நிஜ வாழ்வின் யதார்த்தங்களையும் இயல்பான நிகழ்வுகளையும் கலந்து உருவாக்கப்பட்ட கதை இது. அதனால் ரசிகர்களால் தங்களை இந்தக் கதையுடன் மிக எளிதில் பொருத்திக்கொள்ள முடியும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஒரே சமயத்தில் பல மொழிகளில் உருவாகிறது.
"கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தென்னிந்தியத் திரையுலகில் தனது வசீகர முகத்தாலும் காந்தப் பார்வை கொண்ட கண்களாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஸ்ரேயா. தனது தனித்துவமிக்க நடிப்பால் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருகிறார். இந்தக் கதைக்கு அவர் மிகப் பொருத்தமாக இருப்பார். கதை எழுதும்போதே அவர்தான் நாயகி என்பதை முடிவு செய்துவிட்டோம்," என்கிறார் இயக்குநர் சுஜனா ராவ்.
இப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி ஸ்ரேயாவின் பிறந்தநாளையொட்டி அண்மையில் வெளியிடப்பட்டது. இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாலை மாதவ் வசனங்கள் எழுதியுள்ளார்.
படத்தின் தொழில்நுட்பப் பணிகளையும் இப்போதே தொடங்கி விட்டனர். எனவே ஊரடங்கு முடிவுக்கு வந்த கையோடு 'கமனம்' திரைகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

