படப்பிடிப்புகள் துவங்கியதையடுத்து கோடம்பாக்கத்தில் வழக்கமான பரபரப்பும் சலசலப்புகளும் நிலவுகின்றன.
புது வாய்ப்புகளைத் தேடிப் பிடிப்பதில் கலைஞர்கள் முனைப்பாக உள்ளனர். அந்த வகையில் சில நடிகர், நடிகையர் ஒப்பந்தமாகி உள்ள புதுப்படங்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ மூலம் தமிழில் அறிமுகமான மேகா ஆகாஷ் அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கிறார். அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஓ மை கடவுளே’ நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அறிமுக இயக்குநர் ஸ்வாதினி எழுதியிருக்கும் புதுப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதில்தான் மேகா ஆகாசும் இணைந்துள்ளார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது. ஸ்வாதினி இதற்கு முன்பு சுசீந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
‘96’ படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்த கௌரி கிஷன், தற்போது ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் நாயகியாக நடிக்குமளவுக்கு முன்னேறி உள்ளாராம். ‘அனுக்கிரஹீதன் ஆன்டணி’ என்ற மலையாளப் படத்தில் இவர்தான் நாயகி. இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதற்கிடையே விளம்பரப் படம் ஒன்றில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார் கௌரி கிஷன்.
சினிமா வாய்ப்புகள் திருப்தி அளிக்காததால் அரசியல் பக்கம் கவனம் செலுத்தினார் நமீதா.
முதலில் அதிமுக, பிறகு பாஜக என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமீதாவுக்கு திடீரென புது வாய்ப்புகள் தேடிவருகின்றனவாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இணையத் தொடர்கள் என்பதால் சற்றே தயங்கியுள்ளார்.
எனினும் இணையத்தொடர்கள்தான் எதிர்காலம் என்று நெருக்கமானவர்கள் அறிவுரை கூறவே வரிசையாக கதைகளைக் கேட்டு வருகிறாராம். விரைவில் இவர் நடிக்க உள்ள திரைப்படங்கள், இணையத் தொடர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
சித்தார்த், ஆண்ட்ரியா இணைந்து நடித்த ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ், அடுத்து நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாள்கள் மீதமிருக்கிறதாம்.
இந்நிலையில், ராணாவிடம் கற்பனை நிறைந்த திகில் கதை ஒன்றை சொல்லி பாராட்டு பெற்றுள்ளார். இந்தக் கதையில் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்ட ராணா, நாயகியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரை சிபாரிசு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகுமாம். இதில் நடிகர் ஸ்ரீகாந்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.