அஜித், விஜய் இருவரும் நடிக்கும் அடுத்த படம் குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், இவர்களையும் ரஜினியையும் இவ்விஷயத்தில் முந்திவிட்டார் கமல்ஹாசன்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்துக்கு ‘எவனென்று நினைத்தாய்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ என மூன்று படங்களை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இவர் கூறிய கதையைக் கேட்ட கமல்ஹாசன், தன்னுடன் ரஜினியும் இணைந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதினாராம். இதையடுத்து அவருக்கும் கதை சொல்லப்பட்டது. ரஜினியும் இதில் நடிப்பதாக உடனே ஒப்புக்கொண்டாராம்.
ஆனால், கொரோனா விவகாரம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. இதனால் ரஜினியின் கால்ஷீட் கிடைக்கவில்லை. கமல் மட்டுமே தனித்துக் களமிறங்கி உள்ளார்.
இது முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியைக் கொண்ட சண்டைகள் நிறைந்த கதையாம். தென் தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே லோகேஷ்தான்.
கமலின் ஜோடி யார் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமாம். இதில் ரஜினி நடிப்பதாக இருந்த வேடத்தில்தான் கமல் நடிக்கிறார். எனவே கமல் நடிப்பதாக இருந்த சிறு கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் எனும் கேள்வி எழுந்துள்ளது. அநேகமாக இதற்கான விடை விஜய் சேதுபதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.