தாம் இயக்கும் படங்களைப் போலவே இயக்குநர் வெற்றிமாறனும் வித்தியாசமான மனிதராகத்தான் இருக்கிறார்.
திரைத்துறையில் 13 ஆண்டுகளைக் கடந்திருப்பவர் இதுவரை ஐந்து படங்கள்தான் இயக்கியுள்ளார். ஐந்தும் வெற்றிப் படைப்புகள்.
இந்நிலையில் அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார் வெற்றி. சூரி நடிப்பில் ஒரு படம், சூர்யாவை வைத்து ஒரு படம், அதற்கடுத்து விஜய் நடிப்பில் ஒரு படம், பின்னர் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் படம்.
‘அசுரன்’ படத்துக்குப் பிறகு ஒரே சமயத்தில் பல படங்களில் கவனம் செலுத்தும் அளவுக்குத் தமக்கு தைரியம் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது என்று சொல்லி சிரிக்கும் வெற்றிமாறன், ஓராண்டுக்குள் ஒரு திரைப்படத்தை முழுமையாக உருவாக்கிவிட முடியும் என்பதைத் தாமே தொடக்கத்தில் நம்பவில்லை என்கிறார்.
“என்னையும் அறியாமல் அனைத்துப் பணிகளையும் வேகமாகச் செய்ய ஆரம்பித்தேன். அதற்குள் கொரோனா விவகாரம் பெரிதாகிவிட்டது. ஊரடங்கின்போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த ஒரு தெளிவே இல்லை. அவ்வப்போது மனதில் வெவ்வேறு எண்ணங்கள் தோன்றி மறைந்தன.
“கிருமித்தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதற்கான தடுப்பூசி இன்னும் தயாராகவில்லை என்பதால் படப்பிடிப்புக்குத் தைரியமாக போக முடியுமா என்பது தெரியவில்லை. அனைத்தையும்விட எனக்குள் ஒரு தெளிவு ஏற்பட்டால்தான் எந்தப் படத்தை எவ்வளவு வேகமாக முடிக்க இயலும் என்பது தெரியவரும்.
“எது எப்படியாக இருந்தாலும் முதலில் எல்ரெட் குமாரின் படம், அதன்பிறகு தாணு சார் தயாரிப்பில் சூர்யாவுடன் ‘வாடிவாசல்’ படத்தில் இணைகிறேன். பின்னர் விஜய் சாரின் அழைப்புக்காக காத்திருக்கப் போகிறேன். இவற்றுக்கு மத்தியில் சூரி படம் என்று மேலோட்டமாக ஒரு திட்டம் வகுத்திருக்கிறேன்,” என்கிறார் வெற்றிமாறன்.
‘அசுரன்’ படத்துக்கு அரசியல் ரீதியில் விமர்சனங்கள், பாராட்டுகள், கண்டனங்கள் என எல்லாம் ஒருசேர கிளம்பின. எனவே அடுத்தடுத்த படங்களில் காட்சி அமைப்பில் சில சமரசங்கள் இருக்குமா என்று கேட்டால், ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று வெற்றியிடம் இருந்து திட்டவட்டமான பதில் வருகிறது.
“ஒரு குறிப்பிட்ட பின்புலம் நமக்கு கதையைக் கொடுக்கும். அந்தக் கதையை நாம் சரியாகச் சொல்லவேண்டும். சில கதைகளில் குறிப்பிட்ட மக்களை மையப்படுத்தித்தான் அனைத்தையும் சொல்ல வேண்டியிருக்கும். எனவே, அதற்கு ஆதரவு, எதிர்ப்பு, விமர்சனங்கள், பாராட்டுகள் என மாறி மாறி வந்த வண்ணம் இருக்கும். அதற்காக நாம் செய்யக்கூடிய விஷயங்களை நிறுத்திவிடக் கூடாது,” என்று சொல்பவர் ‘அசுரன்’ படம் மனதளவில் தமக்கு தைரியம் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்.
வேடந்தாங்கல் அருகே கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் பசுமைப் பண்ணை அமைத்திருக்கிறார் வெற்றி. அங்கு சுமார் 600 பந்தயப் புறாக்களை வளர்க்கிறார். இவரது புறாக்கள் உலகளவில் நடக்கும் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளன. இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர் வெற்றி. வேடந்தாங்கல் பண்ணையில் இயற்கை விவசாயத்தைச் செயல்படுத்தி உள்ளார்.
“விஜய் சாருக்காக காத்திருப்பதில் எந்த நஷ்டமும் இல்லை. அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். அவருக்கான கதையை நன்றாக மெருகேற்றத் திட்டமிட்டுள்ளேன்.
“ஊரடங்கு வேளையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,” என்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.