தனது 34ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் பிரியா ஆனந்த். சாக்லெட் விளம்பரம் மூலம் திரைக்கு வந்த இந்தத் தாரகை தனது திரைப் பயணம் இனிப்பாக இருப்பதாகச் சொல்கிறார்.
“நான் ‘வாமனன்’ படம் மூலம் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களாகிவிட்டது. நான் சினிமாவில் நடிக்கத் துவங்கிய புதிதில் அறிமுகமான நடிகைகளில் பலர் இப்போது திரைத்துறையில் இல்லை.
“ஆனால், பத்தாண்டுகளாக நடித்துவரும் எனக்கு ரசிகர்கள் தரும் ஆதரவு நெகிழ வைக்கிறது. அதிலும், திரைத்துறைப் பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து திரைக்கு வந்த நான் இப்போதும் நடித்துக்கொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது,” என்கிறார் பிரியா.
அஜித், விஜய், (சூர்யாவுடன் விளம்பரத்தில் நடித்துவிட்டார்) போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாக நடிக்காத நிலையில், சினிமாவில் தனக்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதாக பிரியா சொல்வது சரியா?
“இரண்டு வருட இடைவெளிக்குப்பின் ‘எல்.கே.ஜி.’ படத்தில் நடித்தேன். படம் பார்க்க திரையரங்கிற்குச் சென்றபோது ரசிகர்களிடம் இருந்து எனக்குக் கிடைத்த வரவேற்பு நெகிழவைத்துவிட்டது. பெரிய நடிகர்களுடன் நடித்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய வரவேற்பை ‘எல்.கே.ஜி.’ படம் தந்தது.
“அதனால்தான் எல்லோரும் ரசிக்கும்படியான, குறிப்பாக குடும்ப ரசிகர்கள் ரசிப்பது மாதிரியான கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறேன்.
“விரைவில் சிவாவுடன் நான் நடித்த நகைச்சுவைப் படமான ‘சுமோ’ வெளியாக இருக்கிறது. அதன்பின் கன்னடத்தில் ஒரு படம் நடிக்க உள்ளேன்,” என்கிறார் பிரியா.
அடுத்த தீபாவளி தமக்கு தலைத் தீபாவளியாக இருக்கலாம் என கடந்த ஆண்டே பிரியா கூறி இருந்தார். இப்போது பிரபல இளம் கதாநாயகனுடன் இணைத்து பேசப்படுகிறார்.
“அதர்வாவுடனும், கௌதம் கார்த்திக்குடனும் அவ்வப்போது என்னை இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. அதில் உண்மையில்லை. அவர்கள் இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள். நானும் அவர்களுக்கு இதுவரை நல்ல தோழியாகவே இருக்கிறேன்.”
வாரிசு நட்சத்திரங்களின் ஆதிக்கம் குறித்து இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. பிரியா என்ன சொல்கிறார்?
“அரசியல் மற்றும் தொழில்துறையில் வாரிசுகள் வரும்போது, திரைத்துறையில் மட்டும் வரக்கூடாதா? அப்படி வந்தாலும் திறமை இருந்தால்தானே வெற்றிபெற முடியும்? அதே சமயம் சினிமா பின்னணி இல்லாமல் வரும் நட்சத்திரங்களின் வளர்ச்சியை தடுக்க நினைக்கக்கூடாது.”
தமிழ் சினிமா உலகம் பற்றி கருத்து?
“மலையாள சினிமாவில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தமிழில் அந்தளவுக்கு இல்லை. அதேசமயம், தமிழ் சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பாலிவுட் உட்பட சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கிறது.”
ஊரடங்கு நேரமிது. பிறந்தநாளை எப்படி கொண்டாடினீர்கள்?
“நான் ஹைதராபாத்தில் என் பாட்டியுடன் தங்கியுள்ளேன். பாட்டியை குளிப்பாட்டுவது, சோறூட்டுவது, மருந்து தருவது என குழந்தையைப் போல் அவரைக் கவனித்துக்கொள்வதில் பொழுது சுகமாக கரைகிறது.
“எனக்கு கணினி சார்ந்த விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் விருப்பம் எப்போதும் இல்லை. ஆனால் நிறைய புத்தகங்கள் படிப்பேன்.
பிரியாவின் பிறந்தநாள் செய்தி?
“என்னை என்னிடம் இருந்து மறைக்க முடியாது... மற்றவர்கள் எப்போதுமே காண முடியாததையும் என்னால் காண முடியும்.
“மற்றவர்கள் எப்போதுமே அறிய முடியாததையும் நான் அறிவேன். என்னை நானே முட்டாளாக்க மாட்டேன்.
“என்ன நடந்தாலும் எனது சுயமரியாதையையும் மனசாட்சியையும் இழக்க மாட்டேன்,” என அமெரிக்க கவிஞர் எட்கர் ஏ.கெஸ்ட் எழுதிய ‘மைசெல்ஃப்’ என்கிற கவிதையில் இருந்து மேற்கண்ட வரிகளை தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் கோடிட்டுக் காட்டி, தாம் எப்படிப்பட்டவர் என்பதை பிறந்தநாள் செய்தியாகச் சொல்லி இருக்கிறார் பிரியா.
மேலும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“இந்த வாழ்க்கை எனக்குப் பல நல்ல விஷயங்களைத் தந்துள்ளது. வாழ்க்கைப் பாதையில் கடந்து வந்த ஒவ்வோர் ஆண்டும் பல நல்ல அனுபவங்களைத் தந்துள்ளன. பொதுவாக நான் பிறந்தநாளைக் கொண்டாடுபவள் அல்ல. எனினும் நன்றி தெரிவிப்பது கடமை.
“வருத்தமே தெரிவிக்காத ஒருவரை மன்னிப்பதுதான் மிகக் கடினமான விஷயம் என்பதைக் கற்றுள்ளேன்,” என்கிறார் பிரியா ஆனந்த்.