சென்னை வரும்போது எப்படியும் தனது தந்தை கமல்ஹாசனை சந்தித்துப் பேசிவிடுவாராம் ஷ்ருதிஹாசன்.
ஆனாலும் தந்தையுடன் தங்காமல் வேறோர் இடத்தில் தனியாகத்தான் இருப்பாராம். காரணம், தனிமையைத் தாம் மிகவும் நேசிப்பதாகச் சொல்கிறார்.
“தனியாக இருந்தால் போரடிக்கும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. உங்களுக்கு நீங்களே போரடிக்கிறீர்கள் என்றால் மற்றவர்களுக்கும் அப்படித்தானே இருப்பீர்கள்,” என்று சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்பி குறும்பாகக் கண்ணடிக்கிறார்.
இந்த ஊரடங்கு வேளையில் தம்மைத் தாமே நேசிக்க கற்றுக் கொண்டாராம். மேலும் சமையல் செய்வது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, துணி துவைப்பது என்று அனைத்து வேலைகளையும் தாமே செய்வதாகவும் சொல்கிறார்.
பிரபலங்கள் எல்லாம் இப்படி வீட்டு வேலைகளைச் செய்வார்களா என்று சிலர் சமூக வலைத்தளங்களில் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புவது தமக்கு வியப்பை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார் ஷ்ருதி.
காரணம் லண்டனில் தங்கியிருந்தபோது குப்பைகளை வெளியே கொண்டுபோய்க் கொட்டுவது முதல் சமையல் செய்து பாத்திரங்களைச் சுத்தப்படுத்துவது வரை அனைத்து வேலைகளையும் இவரே தனித்துச் செய்வாராம்.
“வீடு சுத்தமாக இல்லை என்றால் எனக்கு மூளை வேலை செய்யாது. பலருடன் தொலைபேசியில் பேச வேண்டும், நண்பர்களைச் சந்திக்க வேண்டும், பல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என நம் அனைவருக்கும் ஏகப்பட்ட அழுத்தங்கள் உள்ளன.
“இதன் காரணமாகவே தனியாக இருப்பது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பது எனது கணிப்பு. ஆனால் நான் பல ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்து பழகியவள். அதனால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்போது மட்டுமல்ல, நான் எப்போதுமே தனிமையை நேசிப்பேன்,” என்கிறார் ஷ்ருதி.
ஊரடங்கின்போது இணையம் வழி சிலர் ‘பாத்திரங்கள் கழுவும் சவால்’ என்று தகவல் அனுப்பினராம். ஆனால் பாத்திரம் கழுவுவதும் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வதும் சவால் அல்ல என்று குறிப்பிடுபவர், வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது நமது பொறுப்பு என்கிறார்.
“இப்படியே போனால், ‘பல் தேய்க்கலாம் வாருங்கள்’ என்று சவால் விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,” என்று சொல்லிச் சிரிப்பவர் ஊரடங்கால் குடும்பத்துடன் இணைந்திருக்க முடியவில்லை எனும் வருத்தமும் தமக்கு இருப்பதாகச் சொல்கிறார். எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த இடைவெளி ஓரளவு குறைந்திருப்பதாக உணரத் தூண்டுகிறதாம்.
“உண்மையில் எனது குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க முடியவில்லை, நேரில் சந்தித்துப் பேசமுடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் உதவியால் காணொளி மூலம் அனைவரையும் பார்க்கவும் பேசவும் முடிகிறது. இந்த நிலை மாறவேண்டும். அதிலும் விரைவாக மாறவேண்டும் என்பது எனது விருப்பம்.
“சினிமாவிலும் கூட தினக்கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை நிலையைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக உள்ளது. இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பி, எல்லாம் சரியாகி அனைவருக்கும் நல்லது நடக்கவேண்டும். இதுமட்டுமே தற்போது எனது பிரார்த்தனையாக இருக்கிறது,” என்கிறார் ஷ்ருதி.
தந்தை கமலின் அரசியல் பிரவேசம், அவர் நடிக்கும் படங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதையோ, தகவல்கள் பகிர்ந்து கொள்வதையோ ஷ்ருதி தவிர்த்து வருவதாகத் தகவல். இப்போதுள்ள சூழ்நிலையில் இவை குறித்துப் பேசுவதை விரும்பவில்லையாம்.
“எனது கவனம் முழுவதும் அடுத்தடுத்து இசைத்தொகுப்புகளை வெளியிடுவதில்தான் உள்ளது. வேறு விஷயங்களில் என் கவனம் சிதறிப்போவதை விரும்பவில்லை,” என்கிறார் ஷ்ருதி.