“மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பது பழைய மொழி. மனம் சும்மா இருந்தாலும் காதல் விடுவதில்லை என்பது புதுமொழி,” என்று கவிதையாகப் பேசத் துவங்குகிறார் ‘பாய்ஸ்’ நகுல்.
அண்மையில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். வாயைத் திறந்தால் ஒரே மகள் புராணமாக இருக்கிறது.
“இப்போதெல்லாம் அவர் என்னைக் கண்டுகொள்வதே இல்லை. மகள் அகிரா மீதுதான் அவரது முழுக் கவனமும் உள்ளது,” என்று சிரிக்கிறார் திருமதி ஸ்ருதி நகுல்.
“பள்ளிப் பருவத்தில் மும்பையில் இருந்து வந்து சென்னையில் குடியேறியபோது யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். பெண்களுக்குப் பிடித்த மாதிரி பழகுவது எப்படி என்றே தெரியாது.
“வெளிப்படையாகச் சொன்னால், காதல் என்றால் என்னவென்று தெரியாது,” என்கிறார் நகுல்.
சென்னையில் உள்ள நண்பர் வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். நண்பரது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்தான் ஸ்ருதி.
“பள்ளி நேரம் முடிந்ததும் கூட்டாளி வீட்டுக்குச் செல்வேன். அவரது அம்மா பேச்சில் அடிக்கடி ஸ்ருதியின் பெயர் வந்துபோகும்.
“ஒருமுறை வீட்டிலிருந்த கேக் ஒன்றை சாப்பிட்டபோது, மிகவும் சுவையாக இருப்பதாக நான் பாராட்ட, ‘இதைச் செய்தது ஸ்ருதிதான்’ என்றார் நண்பரின் தாய். ஸ்ருதியின் தொலைபேசி எண்களைப் பெற்று, அவரைப் பாராட்டி தகவல் அனுப்பினேன். அன்றுதான் எங்கள் வாழ்வின் இன்னிசை துவங்கியது,” என்கிறார் நகுல்.
ஸ்ருதியுடன் பழகத் துவங்கும் முன்பே ‘பாய்ஸ்’ படத்தில் நடித்து முடித்துவிட்டாராம். எடுத்த எடுப்பிலேயே காதல் வயப்படாமல், முதலில் நட்பு பாராட்டி, நிறைய பேசி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இருவரும் காதலிக்கத் தொடங்கியதாகச் சொல்கிறார்.
“என்னைப் போன்றவர்களுக்கு தேவைப்படும் ஆதரவு, பேரன்பு, ஆறுதல், எல்லாமே ஒரே பெண்ணிடம் இருந்து கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எனக்கு வாழ்க்கை அப்படித்தான் அமைந்தது.
“ஸ்ருதி மிக நன்றாகப் பேசுவார். கண்ணில் எப்போதும் ஒருவித தெளிவு இருக்கும். பார்க்க அழகாகவும் இருந்தார்.
“திருவிழாவிற்குப் போனால் சாமி கும்பிடுவதைவிட அங்கு வந்து நிற்கும் சின்னக் குழந்தைகளைக் கொஞ்சும் ஆள் நான். ஸ்ருதியின் குடும்பத்தாரும் மிகவும் நல்லவர்கள்.
“என்னை விடவும் ஸ்ருதி உயரம் கொஞ்சம் அதிகம். நான் அவங்களை நிமிர்ந்து பார்த்து பேசுவதே எனக்குப் பிடிக்கும். அதனால் காதலில் அச்சம், குழப்பம், தடுமாற்றம் எதற்கும் இடம் கிடையாது என்ற முடிவுக்கு வந்தேன்,” என்கிறார் நகுல்.
பிறகென்ன... சினிமாவில் வரும் பரபரப்பான காட்சியைப் போல், ஸ்ருதியிடம் சொல்லாமலேயே அவரது வீட்டுக்கு திடீரென்று போனாராம்.
அங்கே காதலியின் பெற்றோரிடம், “உங்கள் மகளை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்,” என்று விஷயத்தைப் போட்டு உடைத்தாராம்.
“ஸ்ருதியின் பெற்றோர் காதுகொடுத்து கேட்டனர். எனது அன்பை வார்த்தைகள் வழியாக விவரிக்க முயன்றேன். உண்மையாக இருந்ததால் அது அவர்களைச் சென்றடைந்தது,” என்று நகுல் சொல்வதை முழுமையாக ஆமோதிக்கிறார் ஸ்ருதி.
எப்போதும் எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசிப் பழகுவதுதான் தமது கணவரிடம் மிகவும் பிடித்த விஷயம் என்கிறார் ஸ்ருதி.
வீட்டில், வெளியில், நண்பர்களோடு என எங்கேயும் இயல்பான நகுலைத்தான் பார்க்க முடியும் என உத்தரவாதம் அளிக்கிறார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது அம்மாவும் அதற்கும் முன்னரே அவரது தந்தையும் காலமாகிவிட்டனர். அந்தச் சோகத்தில் இருந்து அவரை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர மிகவும் சிரமமாக இருந்தது.
“இப்போது மகள் அகிரா பிறந்தபிறகு மகள் பின்னால் சுற்றி வருகிறார். அகிரா எப்போ தூங்குவாள், எப்போது எங்களோடு விளையாடுவாள் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
“அவர் கையில் ரத்தமும் சதையுமாக சின்ன அழுகையோடு, அகிராவைத் தூக்கிக்கொடுத்தபோது நகுல் கண்ணில் நிம்மதியைப் பார்த்தேன்,” என்று நெகிழ்ந்து போகிறார் ஸ்ருதி.