ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள புதுப்படம் ‘நோ என்ட்ரி‘.
உலகில் அதிக மழைப்பொழிவைக் கொண்டுள்ள சிரபுஞ்சி பகுதியில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். அழகு கார்த்திக் இயக்கியுள்ளார்.
இவர் எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இளம் தம்பதியர் மலைப்பிரதேசத்தில் எதிர்கொள்ளும் ஆபத்துகள்தான் படத்தின் கதையாம்.
“மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பிரதேசத்தில் ஒரு சொகுசான இடத்தில் இளம் தம்பதியர் தங்குகிறார்கள். அங்கே மனிதர்களை வேட்டையாடும் நாய்களிடம் அவர்கள் சிக்க நேரிடுகிறது.
“அத்தகைய 10 நாய்கள் சேர்ந்தால் ஒரு யானையையே கொன்றுவிடும் அளவுக்குக் கொடூரமானவை. நர வேட்டையாடும் நாய்களிடம் இருந்து அந்த இளம் ஜோடி தப்பியதா என்பதை திகிலாகவும் விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தி உள்ளோம்,” என்கிறார் இயக்குநர் அழகு கார்த்திக்.
நாய்களுடன் போராடும் காட்சிகளில் ஆன்ட்ரியா கொஞ்சமும் பயமின்றி தைரியமாக நடித்தாராம். இப்படத்துக்காக 15 நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதாம்.
ஆதவ் கண்ணதாசன், ‘வாகா’ படத்தின் நாயகி ரண்யா, ஜெயஸ்ரீ, சதீஷ், டில்லி, கோகுல் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
“இதுவரை தமிழ் சினிமா காணாத ஆபத்தான மலைப்பிரதேசங்களையும் பசுமைக் காட்டு வெளிகளையும் இப்படத்தில் காட்டியுள்ளோம். உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் இடம் சிரபுஞ்சி. மேகாலயா மாநிலத்தில் உள்ள இந்த ஊரில்தான் 45 நாட்கள் எங்கள் படக்குழு தங்கியிருந்தது.
“படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் உலகத் தரத்தில் இருக்கும்,” என்கிறார் இயக்குநர் அழகு கார்த்திக்.