அமெரிக்காவில் இருப்பதால் தம்மால் எஸ்பி. பாலாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை என பாடகர் ஜேசுதாஸ் கூறியுள்ளார்.
எஸ்பிபி தம்மை அண்ணா என்று பாசத்துடன் அழைக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு பிறவியில் இருவரும் சகோதரர்களாக பிறந்திருப்போம் என்று எண்ணத்தோன்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபியின் மரணம் விவரிக்க முடியாத துயரத்தைத் தந்திருப்பதாக அவருடன் நூற்றுக்கணக்கான பாடல்களை இணைந்து பாடியுள்ள பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தெரிவித்துள்ளார்.
எஸ்.பிபி.யின் மரணம் குறித்து அறிந்த அந்தத் தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை என்றும் சிறு வயதிலேயே இவர் பாடியதைக் கேட்டு தான் பாராட்டி வாழ்த்தியதாகவும் ஜானகி தெரிவித்துள்ளார்.
இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பிரமுகர்களும் எஸ்பிபி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், ஆந்திர அரசின் சார்பில் அம்மாநில அமைச்சர் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
ஒட்டுமொத்த இந்திய திரையுலகக் கலைஞர்களும் எஸ்பிபி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.