தமிழில் ‘கேளடி கண்மணி’ உட்பட பல்வேறு மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் எஸ்பிபி.
‘கேளடி கண்மணி’யில் மூச்சு விடாமல் பாடிய பாடல் அவரது சாதனைகளில் ஒன்று. தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட கமல்ஹாசனின் 120க்கும் மேற்பட்ட படங்களில் அவருக்காக பின்னணிக்குரல் கொடுத்தது எஸ்பிபி தான்.
மேலும் ரஜினி, அனில்கபூர், அர்ஜுன் போன்ற நடிகர்களின் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போதும் அவர்களுக்கு எஸ்பிபி பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தொடக்கக் காலத்தில் நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார்.
ராஜா, பாலாவின் ஆழமான நட்பு
தனது நெருக்கமான நண்பரை இழந்து வாடும் இளையராஜா காணொளிப் பதிவு ஒன்றில் உருக்கமாகப் பேசியுள்ளார்.
“சீக்கிரம் எழுந்து வா... உன்னைப் பார்க்க நான் காத்திருக்கிறேன் என்றேன். நீ கேட்கவில்லை. கந்தர்வர்களுக்காக பாடச் சென்று விட்டாயா பாலு.
“நீயின்றி உலகம் சூனியமாகிவிட்டது. பேச்சு வரவில்லை. சொல்வதற்கு வார்த்தைகளும் இல்லை. எல்லா துக்கத்திற்கும் ஓர் அளவு உண்டு. இந்தத் துக்கத்திற்கு அளவில்லை,” என நண்பருக்குப் பிரியா விடை கொடுத்துள்ளார் இளையாராஜா.
எஸ்பிபி பாடிய கடைசிப் பாடல்
கடந்த 54 ஆண்டுகளில் எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் எனப் பயணம் செய்து அனிருத் வரை பலரது இசையில் பாடியுள்ளார் எஸ்பிபி. அவர் கடைசியாக ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துக்காக இமான் இசையில் ஒரு பாடலைப் பாடினார்.
45 படங்களுக்கு இசையமைத்தவர்
எஸ்பிபி சிறந்த இசையமைப்பாளர் என்பதும் அவர் இதுவரை 45 படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் பலருக்குத் தெரியவில்லை. ‘சிகரம்’ அவர் இசையமைப்பில் வெகுவாக பேசப்பட்ட படம். மேலும், நல்ல நடிகர், சிறப்பான பின்னணிக் குரல் கொடுப்பவர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.