'தளபதி'க்கு குவியும் பாராட்டுகள்

'தளபதி'க்கு குவியும் பாராட்டுகள்

2 mins read
d4935e4f-be4b-465b-8259-20500e3a623b
படம்: ஊடகம் -

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் ஒரு சில திரைத்துறை நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதில் நடிகர் விஜய்யும் ஒருவர்.

கொரோனோ தொற்று காரணமாக தங்களுக்காக 'சூப்பர் ஹிட்' பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி.யின் நல்லடக்கத்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. ஆனால், தனக்காக அதிக பாடல்களைப் பாடாத எஸ்.பி.பி.யின் நல்லடக்கத்திற்கு விஜய் தாமரைப்பாக்கத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தியது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

விஜய்க்காக மிகக் குறைவான பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி., விஜய்யுடன் சில படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறார். ஒரு சாதனையாளருக்குச் செலுத்த வேண்டிய இறுதி மரியாதையை மிகச் சரியாக விஜய் செய்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின் வாகனத்திற்கு திரும்பிய விஜய்யைப் பாதுகாத்து, போலிசார் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பாதையில் கிடந்த காலணியை எடுத்து அருகில் நின்றவரிடம் விஜய் அளித்தார். அது தற்பொழுது பலராலும் பேசப்பட்டு வருகிறது.

விஜய் கொரோனா நோய்த்தொற்று பற்றி கவலைப்படாமல் நேரில் சென்றது அவர்மீது உள்ள மரியாதையை அதிகப்படுத்துகிறது என்று இயக்குநர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் இது பற்றி 'ஆடை' பட இயக்குநர் ரத்ன குமார் கூறும்போது, "கொரோனா காரணமாக

பிரபலங்கள் யாரும் வரவேண்டாம் என அரசு கூறியிருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நடிகர் விஜய்யைப் பார்த்த பிறகுதான் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று எனக்குப் புரிந்தது. தளபதி மீது அதிக மரியாதை வருகிறது," என்று கூறினார்.

இதுகுறித்து நடிகர் சவுந்தரராஜா கூறுகையில், "தளபதி. தளபதிதான். விஜய் அண்ணா ஒரு சிறந்த மனிதன்," என்று குறிப்பிட்டு, நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.