இந்தியாவில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டு இருக்கிறது. திரும்பும் பக்கம் எல்லாம் கொரோனா நோய்க்கிருமி பாதிப்பு குறித்த பேச்சாகத்தான் உள்ளது. இந்நிலையில் தமன்னாவிற்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் அப்பா, அம்மாவிற்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்த தமன்னா, “பெற்றோரைத் தவிர வீட்டில் இருக்கும் மற்ற அனைவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை,” என்று கூறியிருந்தார்.
மீண்டும் படப்பிடிப்பைத் துவங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்த நிலையில் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது.
“படப்பிடிப்புத் தளத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த போதிலும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை,” என்கின்றனர் படக்குழுவினர்.
இந்நிலையில் தமன்னா இணையத் தொடரில் நடிக்க ஹைதராபாத்திற்குச் சென்றார். அப்போது அவருக்கு உடல்நலம் இல்லாமல் போனது. அதையடுத்து கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்தபோது அவருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் தமன்னா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தமன்னாவுக்கு கொரோனா கிருமி பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “நம்ப செல்லத்திற்கு கொரோனாவாம்” என்று பதிவிட்டு விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மீண்டிருக்கின்றனர்.
தமன்னாவின் நெருங்கிய தோழி அனுஷ்கா அவரைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் தமன்னா.
திரையுலகத்தில் நடிகைகளுக்கு இடையில் அன்பான நட்பு இருக்கிறது என்றால் அது ஆச்சரியமான ஒன்று. இந்தக் காலத்தில் பெரும்பாலான நடிகைகளுக்கு இடையில் போட்டி இருந்தாலும் எந்தவிதமான பொறாமையும் இல்லாமல் இருக்கிறது.
‘பாகுபலி’ படத்தில் இணைந்து நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகைகள் அனுஷ்கா, தமன்னா. இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமானவர்கள் என்பதைத் தனது அண்மைய பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் தமன்னா.
“தெலுங்கில் நான் நடிக்க வந்தபோது எனக்கென தனியாக ஒப்பனையாளர் கிடையாது. அந்த சமயத்தில் அனுஷ்காதான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இப்போது கூட எனக்கு ஏதாவது தேவை என்றால் முதலில் அவரைத்தான் தொடர்புகொள்வேன். அவரும் எனக்காக அவருடைய ஆதரவைத் தருவார்,” எனக் கூறியிருந்தார்.
‘அந்தாதூன்’தெலுங்கு மறுபதிப்பில் நயன்தாரா நடிக்க ரூ.5 கோடி கேட்டதைத் தொடர்ந்து தமன்னா ரூ.2 கோடி
சம்பளமாகப் பெற்றுக்கொண்டு நடிக்க சம்மதித்து இருப்பது குறிப்
பிடத்தக்கது.