நடிகை நயன்தாரா நடித்துள்ள
‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்கு
களைத் திறந்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டும் அனுமதித்தாலும் அதனால் பெரிய பாதிப்பு எதுவுமில்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர பெரும்பாலான நாட்களில் 50 விழுக்காட்டிற்குக் குறைவான ரசிகர்கள்தான் திரையரங்குகளுக்கு வருகிறார்கள்.
50 விழுக்காட்டு இருக்கைகள் என்றாலும் படம் ஓடும் நாட்கள் இதனால் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே, அதனால் பெரிய பாதிப்பு வரப்போவதில்லை. படத்தை எப்படியும் பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்றுதான் ரசிகர்கள் விரும்புவார்கள்.
மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டாலும் தமிழக அரசு இன்னும் திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதனால் விரக்தியில் இருக்கிறார்கள் படத் தயாரிப்பாளர்கள். சூர்யா போன்ற ஒரு முன்னணி நாயகனின் படமே பெரிய திரையில் வெளியாகாமல் ‘ஓடிடி’யில் நேரடியாக வெளியாக உள்ளதால், மற்றவர்களும் தங்கள் படங்களை ‘ஓடிடி’யில் வெளியிட முன்வந்துள்ளனர். தயாரிப்பாளர்களும் இதற்கு பெரும் ஆதரவு தருவதால் மேலும் பல படங்கள் ‘ஓடிடி’ தளங்களில் வரிசைகட்ட ஆரம்பித்துள்ளன.
அதன்படி, ஏற்கெனவே ‘பொன்
மகள் வந்தாள்’, ‘பென்குயின்’, ‘டேனி’, ‘லாக்கப்’, ‘சைலன்ஸ்’, ‘க/பெ ரணசிங்கம்’ உள்ளிட்ட படங்கள் ‘ஓடிடி’யில் வந்தன.
அடுத்ததாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வருகிற அக்டோபர் 30ஆம் தேதி ‘ஓடிடி’யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் தீபாவளி அன்று ‘ஹாட்விண்மீன் ஓடிடி’ தளத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.
இப்படத்தின் இயக்குநர்களுள் ஒருவரான ஆர்.ஜே.பாலாஜி, ‘ஐபிஎல்’ போட்டிகளுக்கு வர்ணனை செய்து வந்தார். அப்போது படத்தின் விளம்பரப் பணிகள் இருப்பதால் அடுத்த 20 நாட்கள் வர்ணனை செய்யப் போவது இல்லை என்று கூறி சென்னை திரும்பினார்.
அப்போதுதான் இந்தப் படம் ‘ஓடிடி’ தளத்திற்கு நல்ல விலைக்கு கைமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது படம் தீபாவளி அன்று வெளியிடப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நகைச்சுவைப் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பதுபோல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ சார்பில் ஐசரி கே.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
தீபாவளிக்குத் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்த்து ரசித்த காலம் போய் தற்போது வீட்டில் இருந்தபடியே ‘ஓடிடி’யில் பார்க்க வேண்டியிருக்கிறது. எல்லாம் இந்த கொரோனா செய்த காரியம் என்று சினிமா ரசிகர்கள் நொந்துகொண்டிருக்கிறார்கள்.