கங்கனா ரணாவத் தனது அழகாலும் அறிவாலும் திறமையாலும் பிரபலமான நடிகை. நடிப்புத் திறன் மட்டும் அல்ல, ஜான்சி ராணியைப் போன்ற துணிவும் கொண்டவர். அழகழகான உடைகளில் வலம் வருவதில் சளைத்தவர் அல்ல. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர், படப்பிடிப்புத் தளங்கள்தான் தனக்கு நிம்மதியான இடம் என்று கூறியுள்ளார்.
இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தலைவி’ படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் “வணக்கம் நண்பர்களே, அன்பான, மிகவும் திறமையான இயக்குநரான ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அவருடன் படம் பற்றி உரையாடும்போது எடுத்த சில படங்களை பதிவிட்டு இருக்கிறேன். உலகில் எத்தனையோ அற்புதமான இடங்கள் இருக்கலாம். ஆனால், படப்பிடிப்புத் தளங்களே எனக்கு மிகவும் நிம்மதியான, இனிமையான இடங்களாக இருக்கின்றன,” என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் முதல் படமும் கதாபாத்திரத்தின் முன்னோட்டக் காட்சிகளும் வெளியாயின.
இந்நிலையில் இப்படத்தில் சசிகலாவாக நடிகை பூர்ணா நடித்து வருகிறாராம். மேலும் எம்.ஜி.ஆரின் மனைவி, ஜானகி அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை மதுபாலா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.