தெலுங்கில் ‘ஏ மாய சேசவே’ படத்தில் சேர்ந்து நடித்த நாகசைதன்யா, சமந்தா பின்னர் நிஜவாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 2017ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின்னும் நடிப்பைக் கைவிடாமல் நடித்து வருகிறார் சமந்தா. அவ்வப்போது அவர் கர்ப்பம் என வழக்கம்போல வதந்திகள் வந்தாலும் அதையெல்லாம் சமந்தா கண்டுகொள்வதில்லை.
அக்டோபர் 6ஆம் தேதி தங்களது மூன்றாமாண்டு திருமண விழாவைக் கொண்டாடினார்கள். அதை முன்னிட்டு சமந்தா இன்ஸ்ட கிராமில், தனது கணவர் நாகசைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“எனக்காக நீங்கள், உங்களுக்காக நான். எந்த கதவாக இருந்தாலும் அதை நாம் ஒன்றிணைந்து திறப்போம், இனிய திருமணநாள் வாழ்த்துகள் கணவரே!” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு பல திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
‘மாயா’, ‘கேம் ஓவர்’ படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனாவால் இடையில் சில மாதங்கள் நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் படத்தில் சமந்தா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்தது போல காது கேட்காத மாற்றுத்திறனாளியாக சமந்தா இப்படத்தில் நடிக்கிறாராம். இதற்காக இணையம் மூலம் அவர் பயிற்சி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக ராமோஜிராஜ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அரங்கம் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தெரிகிறது.