இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு அண்மையில் வெளியான ‘நிசப்தம்’ படத்தின் மூலம் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் அனுஷ்கா. இனி அடுத்தடுத்து படங்களில் நடிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘பாகுபலி’க்குப் பிறகு இவர் நடித்த படங்கள் அனைத்துமே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி உள்ளன. காரணம், இரு மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதுதான்.
“தமிழில் மட்டும் நடித்தால் தெலுங்கு ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள். அதனால்தான் இருதரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்கிறேன். மேலும் எனது ரசிகர்கள் குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்,” என்கிறார் அனுஷ்கா.
இவர் நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த வெற்றிகரமான பயணத்தைத் திட்டமிட்டு மேற்கொண்டதாக யாரேனும் பாராட்டினால் தமக்குச் சிரிப்புதான் வரும் என்கிறார். ஏனெனில் எந்த விஷயத்தையும் இவர் திட்டமிட்டுக் கொள்வதில்லையாம்.
“இதுதான் உண்மை. கணக்கு வழக்குகளையும் திட்டங்களையும் விட என் இதயம் சொல்வதை மட்டும் கேட்டுச் செயல்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது ஒரு மாயாஜாலம், மாறாக தொழில் அல்ல.
“சினிமாவில் உணர்வுப்பூர்வமாக இரண்டறக் கலந்துவிட்டதால் திரையில் என்னைக் காண்பதில் மட்டுமே கவனம் உள்ளது. இதுவரை சினிமாவை ஒரு தொழிலாகக் கருதி அதன் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முயன்றதே இல்லை,” என்கிறார் அனுஷ்கா.
தாம் நடித்த படங்களையும் கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் தங்களுடையதாகக் கருதுவதாகக் குறிப்பிடுபவர், அதனால்தான் ‘அருந்ததி’ உட்பட தாம் நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதாகச் சுட்டிக் காட்டுகிறார். ரசிகர்கள் தந்த அந்த வெற்றியை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது என்றும் சொல்கிறார்.
“அந்த வெற்றிகள் தந்த மகிழ்ச்சியை எவ்வளவு பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் அனுபவிக்க இயலாது. ரசிகர்கள் என்னை நடிகையாகப் பார்ப்பதில்லை. குடும்பத்தில் ஒருவராகக் கருதுகிறார்கள்.
“இரண்டாண்டுகள் திரைப்படங்களில் என்னைப் பார்க்காத ரசிகர்கள் தினந்தோறும் கடிதங்கள், சமூக வலைத்தளப் பதிவுகள், தொலைபேசி வாயிலாக இடைவிடாமல் தொடர்பு கொண்டு பேசினர். ஏன் நடிக்கவில்லை? வேறென்ன பிரச்சினை? எப்போது திருமணம்? அடுத்து நடிக்கும் படம் என்ன என்று அவர்கள் எழுப்பும் கேள்விகள் எனக்கு எந்த வகையிலும் சலிப்பை ஏற்படுத்தியதில்லை.
“அவர்களுடைய இந்தக் கேள்விகள் அனைத்துமே என்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு என உறுதியாக நம்புகிறேன். ரசிகர்களின் இந்த அன்புதான் என்னை உற்சாகப்படுத்துகிறது. அவர்களின் அன்புக்கு எப்போதும் கட்டுப்படுவேன்,” என்று நெகிழ்கிறார் அனுஷ்கா.
‘நிசப்தம்’ படத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருப்பதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இப்படத்தில் நடிப்பது என தீர்மானித்தது திரைவாழ்க்கையில் தாம் எடுத்த துணிச்சலான முடிவு என்கிறார்.
“நடிக்க வந்த புதிதில் வசனங்களைப் பேசினால் மட்டுமே போதும் என்று நினைத்திருந்தேன்* அப்படிப்பட்ட நான் வாய் பேச முடியாத பாத்திரத்தில் நடித்தது உண்மையாகவே சவால் அனுபவம்தான்.
“சின்னச்சின்ன முக அசைவுகளின் மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்பதையும் பல பக்கங்களுக்கு நீளும் வசனங்களை ஒரு கண்ணசைவில் வெளிப்படுத்திவிட முடியும் என்பதையும் நன்கு உணரவைத்த படம் இது,” என்று சொல்லும் அனுஷ்கா, தாம் அடுத்து நடிக்கவுள்ள படங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களே விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிடும் என்கிறார்.
புதுப்படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிடுவதை முன்னேற்றமாகப் பார்க்கிறாராம். இதன்மூலம் திரையுலகில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறார்.
“எனக்குத் தெரிந்து நிறைய எழுத்தாளர்கள் நல்ல கதைகளை எழுதி முடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக பட வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இணைய வெளியீடு என்பது அவர்களுக்கெல்லாம் நல்லதொரு தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.
“அதே சமயம் திரையரங்குகளில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது என்பதை உணர்ந்திருக்கிறேன். திரையரங்குகளில் கிடைக்கும் மகிழ்ச்சியை எதைக் கொண்டும் ஈடுகட்ட முடியாது. இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைக் காணவேண்டும்,” என்கிறார் அனுஷ்கா.