பண விவகாரத்தால் நடிகர்கள் விஷ்ணு விஷால், சூரி இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
விஷ்ணுவின் தந்தை ரமேஷ் குடவாலா காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றியவர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் என்பவரும் ரமேஷ் குடவாலாவும் நிலம் வாங்கித் தருவதாகச் சொல்லியும், தாம் நடித்த ஒரு படத்துக்கு ஊதியம் தராமலும் ரூ.2.7 கோடி ஏமாற்றி விட்டனர் என்பது சூரியின் புகார்.
அவர் சொல்வது பொய் என்று விஷ்ணு விஷால் கூறுகிறார். இவரும் சூரியும் படங்களில் இணைந்து நடித்ததின் வழி நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
ஆனால், தந்தை மீது சூரி முன்வைத்துள்ள புகார் அதிர்ச்சியும் வருத்தமும் அளித்திருப்பதாக விஷ்ணு தெரிவித்துள்ளார்.
"உண்மையில் சூரிதான் எனது நிறுவனத்துக்குப் பணம் தரவேண்டும். கடந்த 2017ஆம் ஆண்டு 'கவரிமான்' பரம்பரை என்ற படத்துக்காக சூரிக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.
சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் முழு நம்பிக்கை உள்ளதால் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை ஒருநாள் வெளிவரும்," என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

