ரஜினியுடன் இணைந்துள்ள ‘அண்ணாத்த’, குஷ்புவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 200வது படம்.
அண்மைக்காலமாக இவர் அரசியல் குறித்து அதிகம் பேசுவதில்லை. மாறாக சினிமா குறித்து விலாவாரியாக, ஆர்வத்துடன் பேசுகிறார்.
தாம் 200 படங்களில் நடித்திருப்பதுகூட குஷ்புவுக்கு நினைவில்லையாம். அண்மைய சந்திப்பின்போது ஒரு செய்தியாளர்தான் இதை அவரிடம் தெரியப்படுத்தி உள்ளார்.
“ரஜினி சாருடன் நடிக்கும் இந்தப் படம் எனது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல் என்பது எனக்கே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தந்தை காலமாகிவிட்ட நிலையில் எனது 16வது வயதில் குடும்பப் பொறுப்புகளை ஏற்கவேண்டிய நிலை. அதனால் சினிமா துறையில் நுழைந்து ஒருவித வைராக்கியத்துடன் நடித்தேன்.
“நீண்ட பயணத்தில் பலவிதமான அனுபவங்களை எதிர்கொண்டு இன்று நல்ல குடும்பத்துடன் நிம்மதியாக ஒரு வாழ்க்கை அமைந்துள்ளது. பெண் குழந்தைகளுக்குத் தாயின் அரவணைப்பு மிகவும் முக்கியம்.
“கணவரும் சினிமாவில் பணியாற்றுவதால் மகள்களுடனும் முழுமையாக நேரத்தைச் செலவிட நினைத்தேன். அதனால்தான் ‘பெரியார்’ படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன்,” என்கிறார் குஷ்பு.
அதன்பிறகு சின்னத்திரையில் அவ்வப்போது பணியாற்றி வந்தாலும் இவரை நேரில் சந்தித்த ரசிகர்கள் அனைவருமே மீண்டும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்று தவறாமல் வலியுறுத்தினராம்.
இந்நிலையில் ‘அண்ணாத்த’ வாய்ப்பு தேடிவந்தபோது உடனே ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார்.
“ஒருகாலத்தில் எனக்குத் தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டியதாக வெளியான செய்தி மொத்த இந்தியாவையும் மலைக்க வைத்தது. மக்கள் ஏன் இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள் என்று எனக்குள் கேள்வி எழுந்தது. அதன்பிறகு தமிழ் மக்களின் அன்புக்கு நன்றியுடையவளாக இருக்கத் தீர்மானித்தேன்,” என்று சொல்லும் குஷ்பு, பிறகு மற்ற மொழிகளில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டாராம்.
‘சின்னத்தம்பி’ படம் கன்னடத்திலும் தெலுங்கிலும் மறுபதிப்பு செய்யப்பட்டபோது இவரைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்ய இருந்தனராம். அச்சமயம் தமிழில் ‘அண்ணாமலை’, ‘சிங்காரவேலன்’ பட வாய்ப்புகள் தேடி வந்தனவாம்.
“நான் எந்தவிதத் தயக்கமுமின்றி தமிழுக்குத்தான் முன்னுரிமை கொடுத்தேன். தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் என்மீது மிகுந்த அன்பு காட்டினர்.
“எனக்கு முட்டையின் மஞ்சள் கரு ரொம்பப் பிடிக்கும். விஜயகாந்த் சாருடன் நடிக்கும்போது படப்பிடிப்பு உணவு இடைவேளையில் நிறைய முட்டை வரவழைத்து வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டுவிட்டு மஞ்சள் கருவை எனக்குக் கொடுப்பார்.
“குஷ்புவுக்குக் காரமாகச் சாப்பிட்டால் அழுகை வந்துவிடும் என்று சொல்லி காரமில்லாத சாப்பாட்டைப் போடுங்க என்று எனக்காக சத்யராஜ் சார் ரொம்ப மெனக்கெடுவார். ‘நாட்டாமை’ படத்தின் படப்பிடிப்பின்போது ஊட்டியில் நல்ல மழை. அப்போது நான், சரத்குமார் சார், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மூவரும் ஒரே காரில் உலா வந்தோம்.
“ஓரிடத்தில் சாப்பாடு வாங்கி ஒரே தட்டில் மூன்று பேரும் சாப்பிட்டோம். அந்த உணவில் அன்பு நிறைந்திருந்தது. அதுமட்டுமல்ல, ‘காதலன்’’ படத்தில் இடம்பெற்ற ‘பேட்டராப்’ பாடலுக்கு மூன்று பேரும் கொட்டும் மழையில் நடனமாடினோம். இதுபோன்ற இனிய நினைவுகள் மனதில் தேங்கியுள்ளன,” என்கிறார் குஷ்பு.