இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடவே இப்படத்துக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணிக்காக அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளைப் புரிந்தவர். சுமார் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமைக்குரியவர்.
இதைக் குறிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ‘800’ என்றே தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
கடந்தாண்டே இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஒருதரப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர். சேதுபதி இப்படத்தில் நடிக்கக்கூடாது என சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்தனர்.
ஈழப் பிரச்சினையுடன் முரளிதரனைத் தொடர்புப்படுத்தி பலர் காரசாரமாக பதிவிட்டனர்.
இந்நிலையில் கொரோனா விவகாரம் தலைதூக்கியதை அடுத்து விஷயம் அடங்கிப்போனது. இந்நிலையில் ‘800’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
மிக விரைவில் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ள நடிகர், நடிகையரின் பெயர்களையும் வெளியிட உள்ளனர். மேலும் ஓரிரு வாரங்களில் படத்தின் முதல் தோற்ற சுவரொட்டியும் வெளியாக உள்ளது.
இப்படத்தில் நடிக்கக்கூடாது என எதிர்ப்பு கிளம்பி இருப்பது தொடர்பாக விஜய் சேதுபதி இதுவரை வாய் திறக்கவில்லை. எனினும் அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமி இவ்விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் உலகத் தமிழர்கள்தான் விஜய் சேதுபதியின் இதயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சேதுபதி நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம்தான் அதற்குச் சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா... நீரே எங்கள் தமிழ்ச் சொத்து ஐயா, நமக்கு எதற்கு மாத்தையா? மாற்றய்யா?” என்று சீனு ராமசாமி தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி போன்ற திறமை வாய்ந்த நடிகர் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாம் அடுத்து நடிக்க உள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது ‘மாநகரம்’ படத்தின் இந்தி மறுபதிப்பில் அவரும் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘மாநகரம்’. அதில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் இந்தியில் மறுபதிப்பு ஆகிறது.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார். இதில் விக்ராந்த் மாசே நாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் விஜய் சேதுபதி.