இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. பெண்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான துன்பங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
திரையுலகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் சமுதாய அக்கறை இல்லாமல் எடுக்கும் திரைப்படங்கள் தற்பொழுது மிகவும் வக்கிர நிலைமைக்குப் போய்க்கொண்டு இருக்கின்றன.
இயக்குநர் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கிய முதல் இரண்டு படங்களான ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்கள் குடும்பத்துடன் இணைந்து பார்க்க முடியாத அளவுக்கு இருந்தன.
இவர் தற்பொழுது இயக்கி இருக்கும் படம் ‘இரண்டாம் குத்து’. இந்தப் படத்தின் முதல் சுவரொட்டி வெளியானபோதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் அண்மையில் இவர் வெளியிட்ட இப்படத்தின் முன்னோட்டக்காட்சி மிகவும் ஆபாசமாகவும் வக்கிரமான காட்சிகளுடனும் இருந்தன.
முன்னோட்டக் காட்சியைப் பார்த்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மூத்த இயக்குநரான பாரதி ராஜா, “பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு இந்தத் திரையுலகம். இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.
“திரைப்படம் வியாபாரம்தான். ஆனால் தற்பொழுது இது தறிகெட்டுப்போய்க் கொண்டு இருப்பது மிகவும் வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த திரைத்துறையைக் கட்டமைத்தார்கள்? ‘இரண்டாம் குத்து’ படத்தின் சுவரொட்டிகள் கண்களைக் கூசுகின்றன. பள்ளி, மருத்துவமனை, கோயில் போன்றவற்றின் சுவர்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.
“இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண்களே இல்லையா? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன். இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் தணிக்கைக் குழுவையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் இப்படத்தை அரங்கேற்றாதீர்கள்,” என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அதற்கு இந்தப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் பதிலடியாக, “கண்டனம் தெரிவித்து இருக்கும் பாரதிராஜா இயக்கிய ‘டிக் டிக் டிக்’ படம் வெளியானபோது கூசாத கண்கள் இப்போது கூசுகிறதா?” என்று அவரை அவமதித்து கிண்டலாக பதிவிட்டு இருந்தார். அதனால் சந்தோஷ்மீது பலருக்கும் வெறுப்புணர்வு அதிகமானது. பல திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சந்தோஷ். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாரதி ராஜாவின் அறிவிப்புக்கு அவசரமாக பதிலிட்டுவிட்டேன். அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.
“தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா. அவரின் சாதனைகளில் 1 விழுக்காடாவது நாம் செய்ய மாட்டோமா என்று பலரும் பணிபுரிகிறார்கள். பல இயக்குநர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்துள்ளார்.
“அவரின் அறிக்கைக்கு நான் அப்படி எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது. இதற்கு அடுத்து வரும் சுவரொட்டிகள், படம் சம்பந்தப்பட்ட செய்திகள், அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதி
யளிக்கிறேன்,” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்நிலையில், தமிழ் கலாசாரத்திற்கு எதிரான படங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “தமிழ்க் கலாசாரம், பண்பாட்டை சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கும் தணிக்கைக் குழுவுக்கும் வலியுறுத்தப்படும். அத்தகைய படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு நல்ல கருத்துகளைக் கூறும் சாதனமாக திரைப்படங்கள் இருக்கவேண்டும்,” என்று கூறியுள்ளார்.